வங்கதேசத்தில் 30% இட ஒதுக்கீடு ரத்து.. அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! இனியாவது அமைதி திரும்புமா?
டாக்கா: வங்கதேச சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக அங்கு நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்த நிலையில், இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. முன்பு அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதை 5%ஆகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த ஜூலை 5ம் தேதி இந்த இட ஒதுக்கீட்டிற்கு அந்நாட்டு ஐகோர்ட் அனுமதி அளித்த நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்தன. பல இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தன. இதனால் சுமார் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டம்: அங்கே அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், அது கடந்த 2018இல் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றும் மீண்டும் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 5ம் தேதி உத்தரவிட்டது. இதுவே போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.
மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்த நிலையில், அங்குக் கடந்த வியாழக்கிழமை முதல் இணையச் சேவையும் முடக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களைக் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.
உச்ச நீதிமன்றம்: இதற்கிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீட்டை முழுமையாக நீக்க மறுத்த வங்கதேச உச்ச நீதிமன்றம், அங்கே அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது. புதிய விதிகளின்படி 1971 விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் ஏஎம் அமீன் உடின் கூறுகையில், "இட ஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவரும் வங்கதேச உயர் நீதிமன்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட் சட்ட விரோதமாகக் கருதுகிறது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி இனி 93 சதவீத அரசு வேலைகளைத் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்" என்றார்.
புதிய விதிகள் என்ன: இந்த திருத்தப்பட்ட விதிகளின்படி, 1971இல் வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மற்ற தேவையான பிரிவுகளுக்குக் கூடுதலாக 2 சதவீதம் ஒதுக்கப்படும். அதாவது ஒரு சதவிகிதம் பழங்குடியினத்தவருக்கும் மற்றொரு சதவிகிதம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பு இட ஒதுக்கீடு எல்லாம் போக வெறும் 44 சதவீதம் மட்டுமே பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவின் மூலம் பொதுப் பிரிவினருக்கு 93% கிடைக்கும். இந்த உத்தரவைத் தொடர்ந்து போராட்டங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச உச்ச நீதிமன்ற நீதிபதியும் கூட தனது தீர்ப்பிற்குப் பிறகு மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications