இந்தியாவுக்கு குட்பை? பாகிஸ்தானுடன் கைகோர்த்த வங்கதேசம்.. முதல் முதலாக நடந்த பெரிய டீல்.. பின்னணி
டாக்கா: பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் கடந்த 1971 ம் ஆண்டு தனி நாடாக பிரிந்தது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு என்பது நெருக்கமாகி வருகிறது. இப்படியான சூழலில் முதல் முதலாக பெரிய அளவில் இருநாடுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் என்ன? இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எத்தகைய தாக்கம் ஏற்படும்? என்ற தகவல் வருமாறு:
ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த வரை வங்கதேசத்துக்கும், நமக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதனால் நம்நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது.
ஒருபுறம் நம் நாட்டை எதிர்க்கும் முகமது யூனுஸ், மறுபுறம் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாகிஸ்தானிடம் இருந்து தான் வங்கதேசம் 1971ல் தனி நாடானது. இதற்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து நம் படை வீரர்கள் தான் சண்டையிட்டு வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்று கொடுத்தனர். இதனை மறந்து தான் முகமது யூனுஸ் பாகிஸ்தானுடன் ஒட்டி உறவாடி வருகிறார்.
54 ஆண்டுகள் கழித்து இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் தனித்தனியே பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு விசிட் செய்துள்ளனர். விரைவில் வங்கதேச ராணுவத்துக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி அளிக்க உள்ளனர். இது நம் நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 1971 பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்த பிறகு முதல் முறையாக இருநாடுகள் இடையே நேரடி வர்த்தகத்துக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் சார்பில் வங்கதேசத்துக்கு 50 ஆயிரம் டன் அரிசி என்பது வழங்கப்பட உள்ளது.இந்த அரிசி என்பது தலா 25 ஆயிரம் டன் என்று மொத்தம் 2 கட்டங்களாக மார்ச் முதல் வாரத்துக்குள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த மாதம் தொடக்கத்தில் இறுதி செய்யப்பட்டது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் வர்த்தக கழகம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் தான் விரைவில் பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலில் முதற்கட்டமாக விரைவில் வங்கதேசத்துக்கு அரிசி அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிபுன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‛‛பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலில் வங்கதேசத்துக்கு பாகிஸ்தானில் இருந்து அரிசி வந்து இறங்க உள்ளது. இது பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான கடல்வழி வணிகத்தின் புதிய மைல்கல்'' என்று தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தை பொறுத்தமட்டில் அந்த நாட்டுக்கு நம் நாட்டில் இருந்து தான் அதிகமாக அரிசி என்பது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வங்கதேசத்துக்கு நம் நாட்டிடம் இருந்து 83.18 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அரிசி என்பது வழங்கப்பட்டது. அதன்பிறகு மோதலுக்கு நடுவேயும் கடந்த 2024 டிசம்பர் மாத நிலவரப்படி 2 லட்சம் டன் அரிசி என்பது வழங்கப்பட்டது. இப்படியான சூழலில் தான் வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து 50 ஆயிரம் டன் அரிசியை இறக்குமதி செய்கிறது. இது நம் நாட்டுக்கும் - வங்கதேசத்துக்கும் இடையேயான அரிசி வர்த்தகத்தை குறைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications