54 ஆண்டுகளுக்கு பிறகு உறவை பலப்படுத்தும் பாகிஸ்தான்-வங்கதேசம்! இந்தியாவுக்கு சிக்கல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த வங்கதேசம் கடந்த 54 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை பெற்றிருந்தது. அப்போது தொடங்கி நேற்று வரை இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு இருந்து வந்த நிலையில், இன்று இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்தே ஏற்பட்டிருக்கிறது. அப்படியெனில் வங்கதேசத்தின் புதிய அரசு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையாள்கிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

வங்கதேசத்தின் புதிய நிலைப்பாடு:
வங்கதேசத்தின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்எம் கம்ருல் ஹாசன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். அங்கு, அந்நாட்டின் ராணுவ தளபதியை சந்தித்து பேசியிருக்கிறார். கடந்த 54 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சந்திப்பையடுத்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "இந்த சந்திப்பு மூலம் இரு நாடுகளின் ராணுவ வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோட்டு காட்டுகிறோம். வெளிப்புற இடையூறுகள் மூலம் கூட்டாண்மை பாதிக்காது என்பதையும் உறுதி செய்கிறோம்" என்று கூறியுள்ளது.
பிரச்சனை என்ன?:
பாகிஸ்தானுடன் வங்கதேசம் ஒன்றாக இருந்த காலத்தில், வங்கதேசத்தில் இருந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இது விடுதலை போராட்டமாக வெடித்தது. இந்த போராட்டத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவின் தந்தை, முஜ்புர் ரகுமான் மற்றும் அவரது கட்சியான அவாமி லீக் கட்சிதான் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. ஆனால் இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அடக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
பாகிஸ்தான் முயற்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 2 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆதரவு காரணமாக வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்த வெற்றிக்கு விசுவாசமாக அவாமி லீக் கட்சியும், வங்கதேச அரசும் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வந்தன.
இந்தியாவுக்கு பிரச்சனை என்ன?:
1971ல் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்கிற சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இதனை 1975ல் பாகிஸ்தானும் கூட அங்கிகரீத்துக்கொண்டது. ஆனாலும் பழைய பகையை பாகிஸ்தான் மனதில் வைத்திருந்தது. இப்போது இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்திருப்பதால், அது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே சீனா தலைவலியாக உருவாகியிருக்கும் நேரத்தில், தற்போது பாகிஸ்தானுடன் வங்கதேசம் கைகோர்ப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல.
தற்போதைய சூழல் என்ன?:
வங்கதேசத்தை பொறுத்த வரை ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த ஷேக் ஹசீனா துரத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் அங்கு முகமது ஷஹாபுதின் என்பவர் புதிய அதிபராக இருக்கிறார். அவர் தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
இது வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலாக எதிரொலித்துள்ளது. சர்வதேச அளவில் இந்த தாக்குதல்கள் பெரும் கவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications