தலைநகர் பெய்ஜிங்கில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.. அரசும் மக்களும் ஹேப்பி!
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது. தற்போது சீனாவின் வுகான், ஹூபே உள்ளிட்ட மாகாணங்களில் இரண்டாவது அலை வீசி வருகிறது.

இந்த நிலையில் இந்த நோய் சீன தலைநகர் பெய்ஜிங்கில் பரவக் கூடாது என்பதில் சீன அரசும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் உறுதியாக இருந்தனர். காரணம் பெய்ஜிங் முக்கிய வர்த்தக மையமாகும். இங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் வர்த்தக ரீதியில் சீனாவுக்கு பிரச்சினையைக் கொடுக்கும் என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்தது.
கடந்த ஜூன் மாதம் பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி மார்க்கெட்டில் உள்ள மீன் வெட்டும் பலகையில் இருந்த கொரோனா வைரஸ் தலைநகரில் பரவியது. இது அதிகாரிகளை அச்சமடையச் செய்தது.

ஆரம்பத்தில் ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது வரை 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஜூலை 11-ஆம் தேதி முதல் பெய்ஜிங்கில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இது அந்த நகரில் உள்ள மக்கள்தொகையில் 50 சதவீதம் ஆகும்.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலில் மக்கள் நின்று சோதனை செய்து கொண்டனர். லாக்டவுன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பெய்ஜிங்கில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் நகரில் நோய் கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications