விரைவில் வேற்று கிரகவாசிகள் உடன் பேசலாம்... அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை
வாஷிங்டன்: வேற்றுக்கிரகவாசிகளுடன் நாம் பேசும் காலம் வெகு தூரத்தில் இல்லை என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளை கண்டறியும் அமைப்பை சேர்ந்தவர் சேத் சொஸ்தக். இவர் தனது ஆய்வு சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது, இன்னும் 20 ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பாக வேற்று கிரகவாசிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட கூடும் என கூறினால் அது மிகையாகாது எனக் கூறியுள்ளார்.
புதிய கிரகங்கள்...
நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப் பட்டுள்ள கெப்ளர் விண்வெளி ஆய்வு செயற்கை கோள் இதுவரை 72 நட்சத்திர கூட்டங்களில் உள்ள 962 வேற்று கிரகங்கள் கண்டறிந்துள்ளது. இனி வரும் காலங்களில் இது மேலும் 2,900 கண்டுபிடிப்புகளை கண்டறிய சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பூமியைப் போன்ற கிரகங்கள்...
கெப்ளர் கண்டுபிடிப்புகள் மூலம் பூமியை தவிர்த்து 40 பில்லியன் கிரகங்கள் பால்வழி மண்டலத்தில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, அவற்றில் வேற்று கிரகவாசிகள் வாழும் சூழலுக்கான வாய்ப்பும் உள்ளதாக நம்பப் படுகிறது.
பாக்டீரியா, அமீபா...
பூமியின் வரலாற்றில் உயிர் என்றால் பாக்டீரியா, அமீபா மற்றும் ஆல்கா ஆகியவற்றையும் குறிக்கும். எனவே, இவை வேற்று கிரகங்களிலும் இருக்க கூடும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வேற்றுக் கிரக வாசிகள்...
எனவே, விண்வெளி வீரர் மற்றும் எழுத்தாளருமான கார்ல் சகன் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த எஸ்.இ.டி.ஐ அமைப்பானது, வேற்று கிரக வாசிகளின் வாழ்க்கை குறித்த தேடலுடன், அவர்களின் வாழ்க்கை முறையின் தேடலிலும் ஈடுபட்டு உள்ளது.
தகவல் பரிமாறிக் கொள்ளும் திட்டம்...
அதன்படி, வேற்று கிரகவாசிகளுடன் தகவல் பரிமாறி கொள்ளும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், கவனித்தலுடன், அதிக சத்தத்துடன் கத்துதல், நம்மை குறித்து அறிவித்தல், எங்கு உள்ளோம் என தெரிவித்தல் ஆகியவை அடங்கும்.
வேற்றுக்கிரகவாசிகளின் பார்வை...
எனினும், இந்த வேற்று கிரகவாசிகள் நம்மை எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்வியும் நம்முன் எழுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பசுவை பார்ப்பது போன்று நம்மிடம் இருந்து புரத சத்தை எடுத்து கொள்வது போன்றோ அல்லது நமது ரத்தத்தை உறிஞ்சும் கொசுவை போன்றோ இருக்க கூடும் என்பது குறித்து நமக்கு தெளிவாக தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.