துபாயில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய்: துபாயில் பிக் 5 (Big 5) எனப்படும் வர்த்தகக் கண்காட்சி நவம்பர் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
35வது ஆண்டாக நடைபெற்ற இக்கண்காட்சியில் இந்தியா உள்பட 60 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்திய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் (Engineering Export Promotion Council- EEPC) தலைமையில் 50க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்திய பெவிலியனை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் திறந்து வைத்தார். அவர் தனது உரையில், அமீரகம், இந்தியா இடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் மூலம் தெரிவித்தார். இவ்வாய்ப்பினை இந்திய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

உடன் இந்திய வர்த்தக கன்சல் அனிதா நந்தினி, என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் மூத்த துணை இயக்குநர் எஸ். ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கன்சல் ஜெனரல் மற்றும் அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்திய நிறுவன நிர்வாகிகளுடன் கன்சல் ஜெனரல் உரையாடினார்.

தட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் மூத்த துணை இயக்குநர் திருச்சி ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்தவரும் தற்பொழுது கொல்கத்தாவில் பணிபுரிந்து வரும் எஸ். ராஜகோபாலன் கூறுகையில்,
என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் 13,000க்கும் மேற்பட்ட இந்திய வர்த்தகர்களைக் கொண்டு சிறப்புற செயல்பட்டு வருகிறது.

இந்த கவுன்சில் மூலம் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் உலகளாவிய அளவில் வர்த்தகம் புரிய துணை நின்று வருகிறது. அமீரகம் உள்ளிட்ட எந்த நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து எவ்வித தேவையான பொருட்களுக்கும் தங்களை தொடர்பு கொண்டால் அதற்கான தேவையினை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தார்.
2015ம் ஆண்டில் நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications