திருந்தாத துருக்கி.. இந்தியாவை மிரட்ட வங்கதேசத்தில் செய்யும் செயல்.. எர்டோகன் சதியின் பின்னணி
டாக்கா: ஏற்கனவே நம் நாட்டை வங்கதேசம் சீண்டி வருகிறது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இந்தியாவை குறிவைத்து துருக்கி வங்கதேசத்தில் பெரிய வேலையில் இறங்கி உள்ளது. வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கு துருக்கி நிதியுதவி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருவதாக நம் உளவுத்துறை வார்னிங் செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் நம்மிடம் பல ஆண்டுகளாக மோதி வருகிறது. பயங்கரவாதிகளை வைத்து மிரட்டி வருகிறது. பஹல்காமில் பயங்கரவாதிகளை வைத்து தாக்கி 26 பேரை கொன்றது. இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அதிரடி காட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சி சரணடைந்த நிலையில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

அதேபோல் இன்னொரு அண்டை நாடான வங்கதேசமும் நம்மை சீண்ட தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் வெடித்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுக்கு எதிரான செயல்களில் இறங்கி வருகிறது.
இப்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் நம்மை உரசிப்பார்க்கும் சூழலில் இருநாடுகளையும் ஊக்கப்படுத்தும் வேலையில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த துருக்கி, பாகிஸ்தானுக்கு ட்ரோன், ட்ரோன் ஆபரேட்டர்களை வழங்கியது. அதேபோல் வங்கதேசத்தையும் துருக்கி அரவணைக்க தொடங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது பரபரப்பான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நம் உளவுத்துறை உறுதி செய்துள்ளது. அதாவது துருக்கி உளவுத்துறை வங்கதேசத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை தீவிரமாக ஆதரித்து வருகிறது. நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் செய்ய தொடங்கி உள்ளது. வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்புக்கு துருக்கி அதிகளவில் நிதியுதவி செய்து வருகிறது. குறிப்பாக வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் மொக்பஜாரில் ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கு புதிய அலுவலகம் திறக்க துருக்கி உளவுத்துறை பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக பெரிய தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணி என்னவென்றால் நம்நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக துருக்கி செய்து வருகிறது. இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் மாணவர் பிரிவு தலைவரான சாதிக் கயூம் துருக்கி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். அதோடு துருக்கியின் ஆயுத கிடங்கு, ஆயுத தொழிற்சாலைகளுக்கும் விசிட் செய்ய உள்ளதாக நம் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் துருக்கி அதிபர் ரெசேப் தையிப் எர்டோகன் தான் உள்ளார். இவர் தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து ஆதரவும், உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் தான் பாகிஸ்தான், வங்கதேசத்தை அவர் தொடர்ந்து ஆதரிக்கிறார். வங்கதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்காக பல்வேறு திட்டங்களை துருக்கி கையில் எடுத்துள்ளது.
வங்கேதசத்தில் பயங்கரவாத குழுக்கள் வலுவாகும்போது அது நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். குறிப்பாக அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோராம் மாநிலங்களில் பிரச்சனைகள் ஏற்படும். அதேபோல் இந்த துருக்கி அடுத்தக்கட்டமாக மியான்மரில் உள்ள அரக்கன் ஆர்மி குழுவினரையும் ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் சாத்தியமானால் உண்மையில் நம் நாட்டுக்கு பெரும் தலைவி ஏற்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications