உங்களை நம்ப முடியாது.. கைப்பையோடு ரயில் நிலைய ஸ்கேன் மெஷினுக்குள் நுழைந்த பெண்மணி!
பீஜிங்: நானே வேண்டுமானாலும் எக்ஸ்ரே மெஷினுக்குள் போவேனே தவிர கைப்பையை மட்டும் தர மாட்டேன் என கூறிய சீன பெண்மணி குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.
தெற்கு சீனாவின் டொன்குவான் நகரிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் பெண்மணி, எக்ஸ்ரே மெஷினுக்குள் நுழைந்து செல்லும் காட்சி அந்த நாட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.
30 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ளனர்.
சீனாவிலுள்ள பெரிய ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில், பயணிகளின் பைகளை ஸ்கேன் செய்யும் கருவிகள் உள்ளன. இந்த பெண்மணி ரயில் நிலையம் சென்றபோது, அவரின் கைப்பையை ஸ்கேன் செய்ய அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கேட்டனர். ஆனால் கைப்பையை 'கன்வேயர் பெல்ட்டில்' வைத்த அந்த பெண்மணி, அதே பெல்ட்டில் ஏறி அமர்ந்து கொண்டார்.
பேக்குடன் சேர்த்து, இந்த பெண்மணி உடலையும் சல்லடையாக ஸ்கேன் செய்துவிட்டது மெஷின். தனது கைப்பையில் பணம் இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் திருடிவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தால், தானும் ஸ்கேன் மெஷினுக்குள் நுழைந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த இதுபோன்ற எக்ஸ்ரே மெஷினுக்குள் செல்வது உடல்நலத்திற்கு பாதுகாப்பானது இல்லை என்று கூறி, தனது உடலைவிட பணத்திற்குத்தான் அந்த பெண்மணி, முக்கியத்துவம் கொடுத்ததாக சீன நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.