ஈரானில் வானை முட்டிய புகை.. அமெரிக்கா வெடிகுண்டு வீசியதா? பற்றி எரியும் தீயால் பெரும் பரபரப்பு
டெஹ்ரான்: ஈரான் (IRAN)தலைநகர் அருகே இன்று திடீரென்று அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதேபோல் இன்னொரு இடத்தில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் வெடிகுண்டு வீசினாரா? என்ற பரபரப்பு எழுந்தது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.
இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
டிரம்ப் மிரட்டல்
இதுதொடர்பாக இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் ஈரானை டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார். விரைவில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார்.
தொடர் பதற்றம்
மேலும் ஈரானை சுற்றி போர்க்கப்பல்கள், போர் விமானங்களை டொனால்ட் டிரம்ப் குவித்து வைத்துள்ளதோடு, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
வானை முட்டிய கரும்புகை
இந்நிலையில் தான் இன்று திடீரென்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே பரந்த் நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்தவர்கள் திடுக்கிட்டு போயினர். மேலும் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் வீடியோ வெளியானது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான பதற்றம் காரணமாக குண்டு வீசப்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. சிலர் குண்டு வெடித்ததாகவே கூறினர்.
என்ன நடந்தது?
இதனால் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கிடையே தான் அடுக்குமாடி கட்டடம் தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறியதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஈரான் அரசு ஊடகம் சார்பில், ‛‛அடுக்குமாடி குடியிருப்புகளில் குண்டுவெடிப்பு எதுவும் நிகழவில்லை. மாறாக அடுக்குமாடி குடியிருப்பின் அருகே ஆற்றங்கரையோரத்தில் நாணல் புற்கள் உள்ளன. இந்த புற்கள் தீப்பற்றி எரிந்ததால் தான் கரும்புகை வெளியேறியது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என கூறியது. இதனால் ஈரான் மக்கள் நிம்மதியடைந்தனர்.
இருப்பினும் ஈரானின் ஷிராஸ் மாகாணத்தில் மலைப்பகுதியில் திடீரென்று பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் எங்கிருந்து வந்தது? அதன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications