நைஜீரியா: போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்கியதில் 31 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
டமாடுரு: நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினரின் முகாம் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 31 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர். சமீபத்தில் 300 மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அவர்களை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
அம்மாணவிகளை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசு அண்டை நாடுகளின் உதவியோடு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே நைஜீரியாவின் பல பகுதிகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்காணோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நைஜீரியாவின் வட கிழக்கு நகரமான புனியாடியில் உள்ள பாதுகாப்பு படையினரின் முகாம் மீது போகோஹாரம் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் 31 பேர் பலியானார்கள்.
தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் கவச வாகனத்திலும், ஹைலக்ஸ் டிரக்குகளிலும் வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகள் சமீபகாலமாக ராணுவத்தையும் தாக்கி வருகின்றனர்.
தற்போது தாக்குதல் நடந்த இந்த இடத்திற்கு அருகில் தான் கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் 59 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications