லிபியாவில் மூடப்பட்ட எகிப்து, அமீரக தூதரங்களுக்கு வெளியே குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்
திரிபோலி: லிபியாவில் மூடப்பட்ட எகிப்து மற்றும் அமீரக தூதரகங்களுக்கு வெளியே குண்டுகள் வெடித்ததில் 5 காவலாளிகள் காயம் அடைந்தனர்.
லிபியா தலைநகர் திரிபோலியில் இருக்கும் எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. முஸ்லீம் போராளிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் திரிபோலி நகரை கைப்பற்றினர். அவர்கள் திரிபோலியை கைப்பற்றியபோது அமீரக போர்விமானங்கள் எகிப்தில் இருந்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையில் வியாழக்கிழமை எகிப்து தூதரக கட்டிடத்திற்கு அருகே உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் குண்டு வெடித்தது. இதில் தூதரக கட்டிடத்தின் ஜன்னல்கள் சிதறின. மேலும் தூதரகத்திற்கு வெளியே இருந்த 2 காவலாளிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது. இதில் 3 காவலாளிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அமீரகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குண்டுகளும் கார்களில் வைக்கப்பட்டிருந்தன. திரிபோலியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இந்த குண்டுவெடிப்புகள் நிரூபிக்கின்றன என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போராளிகள் தொடர்ந்து திரிபோலியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நிலைமை மோசமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
போராளிகள் திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றுவதை தடுக்க அமீரகம் எகிப்து விமான தளத்தில் இருந்து தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. திரிபோலியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் எகிப்து கடந்த ஜனவரியிலும், அமீரகம் மே மாதத்திலும் தங்களின் தூதரகங்களை மூடின.
முன்னாள் அதிபர் கடாஃபியின் பதவி பறிக்கப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்ட பிறகு லிபியாவில் போராளிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.












Click it and Unblock the Notifications