2 மாதங்களில் தேர்தல்... பிரேசில் அதிபர் பதவி வேட்பாளர் கம்போஸ் விமான விபத்தில் சாவு
ரியோடி ஜெனிரோ: பிரேசில் நாட்டில், அதிபர் பதவிக்கான வேட்பாளர் எடார்டோ கம்போஸ் விமான விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 49.
பிரேசில் அதிபராக தற்போது தில்மா ரவுசெப் பதவி வகித்து வருகிறார். அக்டோபர் மாதம் 5ம்தேதி, புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.

மூன்றாவது இடத்தில் இருந்தவர்
இந்த தேர்தலில் தில்மா ரவுசெப் மீண்டும் போட்டியிட உள்ளார். இவருக்கு முக்கிய போட்டியாக இருப்பவர் மரினா சில்வா. போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தவர், எடார்டோ கம்போஸ். இவருக்கு சுமார் 10 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்
அதிபர் தேர்தலில் எடார்டோ கம்போஸ் வெற்றி பெறுவது கஷ்டம்தான் என்ற போதிலும், பிரேசிலின் இளம் தலைமுறை அரசியல்வாதிகளில் இவர் முக்கியமானவராக பார்க்கப்பட்டார்.

திடீர் விபத்து
இந்நிலையில், விமான விபத்தில் எடார்டோ கம்போஸ் மரணம் அடைந்து அந்த நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். விபத்துக்குள்ளான தனியார் விமான நிறுவனத்தின் விமானத்தில் எடார்டோ கம்போஸ் உட்பட ஏழு பேர் பயணித்தனர். மோசமான வானிலை காரணமாக, சான்டோஸ் நகரில் தரையிறங்க விமானம் முயற்சி செய்துள்ளது. அதற்குள்ளாக குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அனைத்து கட்சியினரும் அதிர்ச்சி
இந்த கோர விபத்தில் எடார்டோ கம்போஸ் உட்பட விமானத்தில் பயணித்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சிபேதமின்றி அனைத்து தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அதிபர் இரங்கல்
அதிபர் ரவுசெப் கூறுகையில் "சிறப்பான எதிர்காலத்தை கொண்டிருந்த ஒரு இளம் தலைவரை பிரேசில் இழந்துவிட்டது. நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வர அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரு நபரை இழந்துள்ளோம்" என்று அதிபர் தெரிவித்துள்ளார். இந்த உரை தேசிய தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications