‘சவப் பெட்டியில்’ ஊர்வலமாக வந்து திருமணம் செய்து கொண்ட பாட்டி!
லண்டன்: இங்கிலாந்தில் திருமணமொன்றில் வித்தியாசமான மணப்பெண் சவப்பெட்டியில் படுத்தவாறே வந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜெனிபக்ளேப் (58). இவர் கிறிஸ்து டோப்பர் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
பொதுவாக இங்கிலாந்து திருமணங்களில் மணப்பெண் திருமணம் நடக்கும் இடத்திற்கு குதிரை வண்டி அல்லது விலையுயர்ந்த காரில் ஊர்வலமாக வருவது வழக்கம்.
அதன்படி, திருமணத்தன்று ஜெனியின் வருகைக்காக மணமகன் ஆர்வமாகக் காத்திருந்தார். ஆனால், திருமணம் நடைபெறும் இடத்திற்கு சவப்பெட்டி ஒன்று ராக்ரருடன் இணைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டது.
இதனைக் கண்டு மணமகன் அதிர்ச்சி அடைந்தார், பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ஜெனி இருந்தார். மணமகன் அதிர்ச்சி விலகாத கண்களோடு இதைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தார் ஜெனி. பின்னர், அவர்கள் இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.
இதுபற்றி ஜெனி கூறுகையில், ‘மோட்டார் சைக்கிள் அபிமானியான எனது சகோதரர் ரொஜரை கௌரவப்படுத்தும் வகையிலேயே இவ்வாறு ஏற்பாடு செய்தேன். எனது சகோதரர் எலும்புகூடு மற்றும் மனிதஉடல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்' என்றார்.
ஜெனி சவப்பெட்டியில் மணமகள் ஊர்வலம் வருவது குறித்து மணமகனுக்கும் முன்கூட்டியே தெரிவிக்காததால், அவர் மிகவும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.