ஸ்கை டைவ்... வெளியே குதிக்க தயாரானபோது விமானம் விபத்தில் சிக்கி இந்தியப் பெண் பலி!
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் ஸ்கை டைவின்போது விமானத்திலிருந்து கீழே குதிக்கத் தயாரானபோது அந்த விமானம் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் வர்ஷா மைசூரியா. 42 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அங்குள்ள அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக மெக்சிகோவுக்கு சென்றிருந்தார். அங்கு சந்தோஷமாக குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்து வந்த அவர் ஸ்கைடைவிங்கில் ஈடுபட்டார். அதுதான் அவரது கடைசி சந்தோஷமாக போய் விட்டது.

சம்பவத்தன்று ஸ்கை டைவில் ஈடுபட அவர் விமானத்தில் ஆயத்தமாக இருந்தார். அது ஒரு செஸ்னா 180 விமானமாகும். பைலட்டுடன், மைசூரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் ராபின் பெலச்னி ஆகியோர் இருந்தனர்.
எல்லாம் தயாராகி வர்ஷா விமானத்திலிருந்து கீழே குதிக்கத் தயாரானபோது திடீரென விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து விட்டது. இதில் வர்ஷா, பயிற்சியாளர் மற்றும் விமானி ஆகியோர் பரிதாபமாக கடலுக்குள் மூழ்கி விட்டனர்.
இவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் யாரும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்தில் சிக்கி மூன்று பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை கடலில் விழுந்த அந்தக் குட்டி விமானமும் மீட்கப்படவில்லை. இதனால் வர்ஷாவின் குடும்பத்தினர் இங்கிலாந்தில் பெரும் கவலையுடன் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications