திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த "வெங்காயங்கள்" செய்திருக்கும் வேலையைப் பாருங்க!
லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர்.
இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை.
லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்களாம் பலரும். அதாவது திண்ணையில் இரும்புக் கம்பியை பதித்து வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்களாம் பலர்.
உலகப் பொது எண்ணம்
நம் ஊர்களில் பார்த்திருக்கலாம். அடுத்தவர் வந்து நம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடக் கூடாது என்பதற்காக சிலர் முள்ளைப் போட்டு வைப்பார்கள், சிலர் எதையாவது சும்மாவாவது போட்டு வைத்திருப்பார்கள். சிலர் கல்லைக் கொட்டி வைப்பார்கள்.
பஸ் ஸ்டாப்களில்
அதேபோல பஸ் ஸ்டாப்களில் ரொம்ப நேரம் உட்கார்ந்து கடலை போடுவோரை விரட்டுவதற்காகவே சீட்டை மட்டும் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். வெறும் இரும்புக் கம்பி மட்டும் இருக்கும். ஆனால் அதிலும் கூட சில விடலைகள் தங்களது சீட்டை படு லாவகமாக வைத்துக் கொண்டு அமர்ந்து கடலையைத் தொடர்வதும் உண்டு.
லண்டன் குசும்பர்கள்
லண்டனிலும் இதேபோன்ற குசும்புத்தனம் அதிகரித்துள்ளதாம். வீடுகளின் முன்புறங்களில் வீடு இல்லாதவர்கள் வந்து முகாமிட்டு விடக் கூடாது என்பதற்காக விதம் விதமான வில்லத்தனங்களை செய்கிறார்களாம் அவர்கள்.
திண்ணைகளில் இரும்பு முள்
வீட்டின் முன்புறம் உள்ள திண்ணை போன்ற பகுதிகளில் இரும்பு முள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி வைக்கிறார்களாம். இதற்கு டிபன்சிவ் ஆர்க்கிடெக்சர் என்று பெயர் வேறு சூட்டிக் கொள்கிறார்கள்.
சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
இத்தகைய செயலுக்கு சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஆர்க்கிடெக்சர் இல்லை. மனிதாபிமானமுற்ற குறுகிய புத்தி கொண்ட செயல் என்று அவர்கள் சொல்கிறார்கள்.