பெருவில் 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து... 44 பேர் பலி!
லிமா : பெரு நாட்டில் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் விழுந்ததில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரு நாட்டில் சாலை விபத்துகள் என்பது அடிக்கடி நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு தலைநகர் லிமாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 52 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 21ல் மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒகோனா பகுதியில் அமைந்துள்ள மனபெரிகனசூர் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்ற சென்று கொண்டு இருந்துள்ளது. பேருந்து நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் திரும்பும் போது நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
பேருந்து கவிழ்ந்து விழுந்த இடத்தில் ஆறு ஓடுவதால் நீரில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் 43 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தார்.
இதனிடையே மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்து வருகின்றனர். 300 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்பதில் சிரமம் உள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 44 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில உடல்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் பற்றி முழு விவரங்களை கூற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications