இந்தியா - வங்கதேசம் இடையே 2 வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது
டாக்கா: இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 வழித்தட பேருந்துச் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய மூவரும் இணைந்து டாக்காவில் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார் பிரதமர் மோடி. நேற்று டாக்காவில் இந்தியா- வங்கதேசத்திற்கு இடையேயான 2 வழித்தட பேருந்து சேவைகளைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரோடு சேர்ந்து மோடி, இந்தியா - வங்கதேசம் இடையிலான 2 வழித்தட பேருந்து சேவைகளை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
பயணச்சீட்டு...
பேருந்துப் போக்குவரத்து தொடங்கியதை குறிக்கும் வகையில், அகர்தலா - டாக்கா - கொல்கத்தா பேருந்துச் சேவையின் அடையாள பயணச் சீட்டை பிரதமர் மோடி, ஷேக் ஹசீனாவிடம் வழங்கினார்.
|
ஷேக் ஹசீனா..
அதேபோல், டாக்கா - ஷில்லாங் - குவாஹாட்டி பேருந்துச் சேவையின் அடையாள பயணச் சீட்டை ஷேக் ஹசீனா, மோடியிடம் வழங்கினார். மேலும், கொல்கத்தா - டாக்கா - அகர்தலா பேருந்துச் சேவையின் அடையாள பயணச் சீட்டை மம்தா பானர்ஜி, ஷேக் ஹசீனாவிடம் வழங்கினார்.
இருநாட்டு தொடர்பு அதிகரிக்கும்...
இது தொடர்பாக, மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இந்தப் பேருந்துகள், வங்கதேசத் தலைநகர் டாக்கா வழியாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயம், அஸ்ஸாம் ஆகியவற்றை மேற்கு வங்கத்துடன் இணைக்கும். இதன்மூலம், இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகள் அதிகரிக்கும்' என்றார்..
மறக்க முடியாது...
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், "பேருந்துச் சேவைகள் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும். 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரின்போது, இந்தியா ஆற்றிய பங்கை மறக்க முடியாது' எனத் தெரிவித்தார்.
வாழ்த்துக்கள்...
பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்படுவதற்கு முன்பு, பேருந்தினுள் சென்ற மோடி பயணிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.