மீத்தேன் வாயு கசிவு... கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம் - அச்சத்தில் மக்கள்
கலிபோர்னியா: பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிவு சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதால் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்' (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்து கேஸ் கசிவது, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கலிஃபோர்னியா காற்று வள வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போதும் மணிக்கு 30 ஆயிரம் முதல் 58 ஆயிரம் கிலோ வரை நிறை கொண்ட நச்சு மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாயு கசிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகில் உள்ளது போர்டர் ராஞ்ச் பகுதி, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போது தற்காலிகமாக வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமட்டலும், மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படுவதாக அவர்கள் புகார் கூறியதை அடுத்து, கடந்த திங்கள் அன்று அப்பகுதி மக்களை கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் சந்தித்து ஆறுதல் கூறினார். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போர்டர் ராஞ்ச் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக கவர்னர் பிரவுன் புதனன்று அறிவித்தார். மேலும் அனைத்து அரசு அதிகாரிகள், இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சோகால்கேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் லாய்ட் கூறும்போது, கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கசிவை அடைத்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீத்தேன் வாயு எடுப்பதானால் கலிபோர்னியாவைப் போல ஆபத்தான நிலை உருவாகும் என்று தெரிந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசு அனுமதிப்பது ஏன் கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications