சபாஷ்.. பாகுபாடுகளுக்கு எதிரான பாலிசியில் "ஜாதியை" சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகம்!
கலிபோர்னியா: மாணவர்கள் மீதான ஜாதிய வன்மம் அதிகரித்ததையடுத்து, பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் (non-discriminatory policy) ஜாதி என்பதையும், சேர்க்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மிகப்பெரிய பிரபலமான பல்கலைக்கழகம். 23 கேம்பஸ், 4.85 லட்சம் மாணவர்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் என மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் மீது சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் நடப்பதாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. எனவே, மாணவர்களின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தது.

பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழக 23 கேம்பசிலும், ஜாதிய பாகுபாடு குறித்து விசாரணை நடத்தியது நிர்வாகம். இதையடுத்து, மாணவர்கள் மீதான பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையின் பாதுகாக்கப்பட்ட பிரிவில் ஜாதி என்பதையும் சேர்க்க கொள்கை முடிவை எடுத்தது பல்கலைக்கழக நிர்வாகம். அமெரிக்காவில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பலரும்பல்கலைக்கழகத்தின் இந்த முற்போக்கு நடவடிக்கையைப் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஜாதிய பாகுபாடு
ஜாதியப்பாகுபாடு, நிற ஏற்றத்தாழ்வு உலகமெங்கும் இப்போதும் இருக்கிறது. தெற்காசிய நாடுகளிலும் சாதியப் பாகுபாடுகள் அதிகளவில் இருக்கின்றன. நேபாளம், வங்கதேசம், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சாதிய பாகுபாடு வழக்கத்தில் உள்ளது. இந்த நாடுகளிலிருந்து அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் சாதியப் பாகுபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மாணவர்கள்
கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் பாரியர், அங்கு நடக்கும் ஜாதிய பாகுபாடு குறித்து கூறுகையில், ''நான் ஒரு தலித். நேபாளத்தில் எங்கள் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக நான் அமெரிக்காவுக்குச் சென்றேன். நான் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் சாதி ரீதியிலான பாகுபாட்டைச் சந்தித்தேன். எனது முதுகலை பட்டப்படிப்பின்போது நேபாளத்தைச் சேர்த்த இரு மாணவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் எனது பெயரை சொன்னதும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர். அமெரிக்காவில் உள்ள 25 சதவிகித தலித் மக்கள் சாதி ரீதியிலான பாகுபாட்டைச் சந்திக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

சமத்துவம்
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமத்துவ ஆய்வகத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் தேன்மொழி சவுந்தர்ராஜன் டிஎன்எம் ஊடகத்திடம் கூறுகையில், ''அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் இந்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் நிறைய எதிர்ப்புகளையும் துன்புறுத்தல்களையும் சந்தித்துவந்தோம். பல்கலைக்கழகத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர 23 கேம்பசிலும் நாங்கள் அரும்பாடுபட்டு உழைத்தோம்'' என்று தேன்மொழி கூறியுள்ளார்.

சூழல்
பல்கலைகழக வேந்தர் ஜோசப் கேஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், ''திறமையான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் வரவேற்று, வெற்றி பெற ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் விரும்புகிறது. அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார். அமெரிக்காவில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பல மனித உரிமை அமைப்புகள் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் இந்த முற்போக்கு நடவடிக்கையைப் பாராட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications