கைதிகள் பரிமாற்றத்தால்.. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம்! நிரந்தர அமைதிக்கு திரும்புமா காசா?
டெல் அவிவ்: ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து பணய கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இப்படி இருக்கையில், மீண்டும் காசாவில் போருக்கு முன் இருந்த நிரந்தர அமைதி திரும்புமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
முதல் கட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும், சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதிப்பதை இஸ்ரேல் தவிர்க்க வேண்டும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில், 1500 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசா மீது இஸ்ரேல் மிகப்பெரிய போரை தொடுத்தது. இதில் இப்போது வரை 46,000-48,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 99% பேர் பொதுமக்கள்தான். எனவே போர் தவறான திசையில் சென்றுக்கொண்டிருக்கிறது என உலக நாடுகள் கண்டன குரல் எழுப்பின.
ஆனால், அமெரிக்காவை கூட வைத்துக்கொண்டு இஸ்ரேல், போரை நிறுத்தாமல் கொண்டு சென்றது. தற்போது ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்பட்டிருக்கிறது.
போர் நிறுத்தம் காரணமாக ஹமாஸ் பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் பணைய கைதிகளும், இஸ்ரேல் பிடித்து வைத்திருந்த பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த கைதிகள் பரிமாற்றம் இன்று வரை நீடித்து வருகிறது. எனவே இதை வைத்து போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்றும், போர் நிறுத்தம் மட்டுமே இரு நாடுகளுக்கும் நல்லது என்றும் சர்வதேச தலைவர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது இன்னும் தெரியவில்லை.
போர் நிறுத்தம் சுமார் 15 மாதங்கள் நீடிக்கும். அதாவது 2026 மே மாதம் வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்த காலத்தில் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். ஆனால் போதுமான அளவுக்கு உதவிகள் கிடைக்கப்படுவதில்லை என்று பாலஸ்தீனம் குற்றம்சாட்டியுள்ளது. இப்போது வரை தேவையான அளவுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக, குடிசைகளை அமைக்க பயன்படும் போர்வைகள் கிடைக்காததால் இன்னமும் காசா மக்கள் பலர் குளிரில் தவித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் காசாவின் உடனடி தேவையாக இருக்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய உலக நாடுகள் உதவியுள்ளன. இந்தியா இதுவரை 70 டன் அளவுக்கு உணவு, மருந்து என மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்திருக்கிறது.
ஆனால் இவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்திருக்கிறது. இஸ்ரேல் அனுமதி கொடுத்தால்தான் பொருட்களை ஏற்றி வரும் டிரக்குகள் காசாவுக்குள் நுழைய முடியும். எனவே இஸ்ரேல் இதனை அனுமதிக்க வேண்டும், காசாவில் நிரந்தர போர் அமைதி ஏற்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications