காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எழுப்புவோம்- இங்கிலாந்து
லண்டன்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின்போது தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப் போவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது தவறு என்றும், மாறாக பிரச்சினைகளை அங்கு விவாதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கும், காமன்வெல்த் அமைப்புக்கும் இடையே நெருங்கிய உறவும், தொடர்பும் உள்ளதால், தனது நாட்டால் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் காமனவெல்த் மாநாட்டில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து இங்கிலாந்து பிரச்சினை எழுப்பும் என்றார்.
ஆனால் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறுகையில், நான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன். இலங்கையில், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு இலங்கை அரசிடம் பதில் இல்லை. சட்டவிரோத படுகொலைகளும் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலையில் இலங்கை செல்வது சரியல்ல என்று எனக்குப் படுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications