முதலில் பிரதமர் பதவி போச்சு.. இப்போது தேர்தலில் இருந்தே விலகல்.. ஜஸ்டின் ட்ரூடோ நிலைமையை பாருங்க
ஒட்டாவா: கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு சொந்த கட்சி மற்றும் கனடா மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் நடைபெற உள்ள கனடா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனடா பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் நம் நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்தார். அதன்பிறகு ஜஸ்டின் ட்ரூடோ நெருக்கடியான நிலையை சந்திக்க தொடங்கினர். அவரது செல்வாக்கு என்பது மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.

கனடாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதாவது ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஜஸ்டின் ட்ரூடோவுடனான கருத்து வேறுபாட்டால் அவர் ராஜினாமா செய்தார். மேலும் ஜஸ்டின் ட்ரூடோ தனது சுய விளம்பரத்துக்காக செயல்படுகிறார். நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொள்வது இல்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது சொந்த கட்சியான லிபரல் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்ப தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் ஜஸ்டின் ட்ரூடோ வரும் கனடா பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ, ‛‛கனடாவில் நடைபெற உள்ளது பொதுத்தேர்தலில் நான் போட்டியிடபோவது இல்லை. இது எனது சொந்த முடிவாகும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் அரசியலில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக தற்போது சொந்த கட்சி மற்றும் கனடா மக்கள் எதிராக உள்ளனர். அதேபோல் அவருக்கு பிற நாட்டு தலைவர்களிடம் ஆதரவு என்பது இல்லை.
இந்தியாவுடன் மோதல் போக்கை அவர் கடைப்பிடித்து வந்தார். அதேபோல் அமெரிக்க அதிபராக ஆக பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்புடன் நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் தற்போது 50 மாகாணங்கள் உள்ள நிலையில் அண்டை நாடான கனடாவை 51வது மாகாணமாக இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிகப்படியான வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications