பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு
லண்டன்: பாகிஸ்தான் சிறுமியான மலாலாவுக்கு கனடாவின் கௌரவ குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்த மலாலா யூசப்சாய் என்ற சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். ஆனாலும், மலாலா கொல்லப்பட வேண்டியவர் என தாலிபன்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவியும் பரிசுகள்....
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இருந்தது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

ஒபாமாவுடன் சந்திப்பு....
இதுதவிர பல்வேறு சர்வதேச கௌவுரவ விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையும், அவரது மனைவியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார்.

அரண்மனை அழைப்பு....
இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆசை....
சமீபத்திய உரைகளில், ‘தான் பாகிஸ்தானில் சிறந்த அரசியல்வாதியாக உருவாக வேண்டும், பிரதமராகி அந்நாட்டின் நிலைமையை மாற்ற வேண்டும்' என பரபரப்பாக பேசி வருகிறார் மலாலா.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
இந்நிலையில், மலாலாவுக்கு கௌவுரவ குடியுரிமை வழங்கி சிறப்பிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.

ஆறாவது நபர்....
இதற்கு முன்னர், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு கனடா கௌரவ குடியுரிமை வழங்கியுள்ளது. அந்தவகையில் கனடா நாட்டின் கவுரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications