“கனடாவை ட்ரம்ப் அபகரிக்க நினைப்பது உண்மை.. காரணம் இருக்கு..” ரகசிய மீட்டிங்கில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
டொராண்டோ: கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் ஆக்கி கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவது உண்மை என்றும், அதற்கான காரணம் இதுதான் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு முக்கியமான மீட்டிங்கில் கூறியதாக கனடாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், பல்வேறு விஷயங்களில் அதிரடி காட்டி வருகிறார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்த உடனேயே அது குறித்து பேசிய டொனால்டு டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வதாக விருப்பம் தெரிவித்தார்.

கனடா நாட்டில் பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அவரது லிபரல் கட்சிக்குள்ளும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் ட்ரூடோ கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய பிரதமரை தமது கட்சியினர் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதற்கான யோசனையை அவரிடம் தெரிவித்தார். "கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம்" என ட்ரூடோவிடம் கூறினார் ட்ரம்ப்.
இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் தம்முடைய சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். கனடா - அமெரிக்கா எல்லை குறித்த வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்து இருந்தார். அதற்கு கனடா பதிலடி கொடுத்திருந்தது.
இந்நிலையில் தான் அண்மையில் கனடா, சீனா மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்குப் பிறகு கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் வர்த்தக அமைப்பினருடன் மூடப்பட்ட அறையில் நடந்த ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய தகவல்கள் மைக்கில் வெளியே கேட்டதாக அந்நாட்டு ஊடகமான CBC தெரிவித்துள்ளது. டொராண்டோ ஸ்டார் ஊடகத்திலும் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தான் டொனால்ட் டிரம்பின் திட்டம் குறித்தும் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"கனடாவில் உள்ள இயற்கை வளங்கள் மூலம் பலனடைவதே ட்ரம்ப்பின் விருப்பம், அதனால் தான் அடிக்கடி நம்மை அமெரிக்காவுடன் இணைத்து அதன் 51வது மாகாணமாக மாற்றுவது பற்றி பேசி வருகிறார்கள். அவர்கள் நமது வளங்களைப் பற்றியும், நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றின் பயன்களை அடையவும் விரும்புகிறார்கள்." என ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. பசுமை எரிசக்திக்கான முக்கிய தேவைகளான லித்தியம், கிராஃபைட், நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் கனடாவில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications