கேப்டவுனில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... ஏப்ரலுக்குப் பிறகு ஒரு சொட்டு கூட கிடைக்காதாம்!
தென்ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் 3 மாதத்தில் சொட்டு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
Recommended Video

கேப் டவுன்: கேப் டவுனில் இன்னும் 3 மாதங்களில் தண்ணீரே கிடைக்காத அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நூற்றாண்டின் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் கண்ட நாடாக இருக்கும் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் ஏப்ரல் 12ம் தேதி முதல் குடிநீர் விநியோகமும் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக மழை குறைந்ததால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. தண்ணீருக்காக மிகப்பெரிய கலவரமே வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள தென்னாப்பிரிக்க நாட்டின் தலைநகர் கேப் டவுனில், நான்கு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எல் நினோ காரணமாக, இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை அளவு மிகவும் குறைந்ததால், கேப் டவுனில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இங்கு வசிக்கும் மக்களுக்கு, ஒருவரது தினசரி தேவைக்காக, 87 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

வறட்சியை நோக்கி கேப்டவுன்
எனினும் அரசு வழங்கும் தண்ணீர் போதவில்லை என்பதால் மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேறு நகரங்களில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். இங்குள்ள நீர்நிலைகள் அநேகமாக ஏப்ரல் 12ம் தேதிக்குப் பிறகு தண்ணீரே இல்லாத அளவிற்கு வறண்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கையாக மக்கள் தண்ணீர் பயன்பாடானது நபருக்கு நாள் ஒன்றிற்கு 50 லிட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் 'டே ஜீரோ' நீர் 10 நாட்கள் மட்டுமே தள்ளிப் போடப்பட்டுள்ளது.

கேப்டவுன் மக்களின் பரிதாப நிலை
அரசு ரேஷன் முறையில் மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருவதால் மொத்தமாக இந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு என்பது 17.2 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இது 13.5 சதவீதமாக குறையும் போது தினசரி மக்களுக்கு ரேஷன் முறையில் வழங்கப்படும் நீர் 25 லிட்டர் என குறைக்கப்பட்டு 200 நீர் சேகரிப்பு மையங்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு கட்டுப்பாடுகள்
மக்கள் யாரும் 2 நிமிடத்திற்கு மேல் ஷவரில் நின்று குளிக்கக் கூடாது. கார் சுத்தப்படுத்துதல், நீச்சல் குளம் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

கைபிசைந்து நிற்கும் அரசு
உலகிலேயே தண்ணீரின்றி முற்றிலும் வறண்ட, மிகப் பெரிய நகரங்களில் முதல் நகரம் என்ற பெயர் கேப் டவுனுக்கு கிடைக்கப் போகிறது. தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்கள் அலட்சியப்படுத்தியத்ன் பலனையே தற்போது அனுபவித்து வருவதாக நகர மேயர் பெட்ரிஷியா டீ லில்லி கூறியுள்ளார். மேலும் டே ஜீரோவிற்குப் பிறகு என்ன செய்வது என்ற எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications