அமெரிக்க வெள்ளை மாளிகையில் மோத வந்த கார்: போலீசார் சுட்டு பெண் பலி- குழந்தை மீட்பு
வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகையில் அத்துமீறி புகுந்த கார் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதை ஓட்டி வந்த பெண் பலியானார்.
வெள்ளை மாளிகையில் இருந்த பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு அந்த கார் புகுந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் உளவுப் பிரிவினரும் அந்தக் காரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து செனட் அலுவலகத்தில் மோதி நின்றது.

இதையடுத்து அதை ஓட்டி வந்த பெண் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். அவரை போலீசார் துப்பாக்கிகளால் சுட்டபடியே விரட்டிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் பலியானார்.
காரில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

முதலில் அந்தக் கார் பெர்சிங் பார்க் அருகே இருந்த தடுப்பை மீறிச் சென்றது. அந்தக் காரை நோக்கி போலீசார் சுட்டபோது அது நிற்காமல் சென்றதால் போலீசார் கார்களில் அதை விரட்டிச் சென்றனர்.
பின்னர் மேரிலேண்ட் அவன்யூ அருகே இருந்த இன்னொரு தடுப்பையும் அந்த கார் உடைத்துக் கொண்டு சென்றது. இதையடுத்தே போலீசார் அதை கார்களில் விரட்டிச் சென்றனர்.
செனட் அலுவலகத்தை நெருங்கியபோது அங்கிருந்த போலீசார் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் ஒரு காவலரும் ஒரு உளவுப் பிரிவு அதிகாரியும் காயமடைந்தனர்.
காரில் வந்த அந்தப் பெண் சோமாலியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால், இது தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications