உறவுகளை 'செல்'லரித்துப் போக வைத்து ஓவர் மன அழுத்தத்தை தரும் ‘தொல்லை’ப் பேசிகள்!
வாஷிங்டன்: செல்போன்கள் காதல் உறவுகளை உடைத்து, மனிதர்களை அதிக மன அழுத்திற்கு ஆளாக்குவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தொலைதூரத்தில் இருப்பவர்களை விரைவாகத் தொடர்பு கொள்வதற்காக கண்டுபிடிக்கப் பட்டது தான் தொலைபேசி. அதனை வீட்டிற்குள் ஒரு மூலையில் வைத்து அதன் அருகிலேயே அமர்ந்திருக்காமல், நமது வசதி போல் எங்கும் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது தான் செல்போன்.
உலகத்தையே கைக்குள் அடக்கும் பெருமை செல்போனிற்கு உண்டு. ஆனால், செல்போன்களால் நன்மைகளைப் போலவே தீமைகளும் உண்டு. அது மனித உறவுகளை உடைத்து மன அழுத்தத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

செல்போன் அடிமைகள்...
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் செல்போன் அடிமைகளாக மாறி வருகின்றனர். அருகருகில் நின்றால் கூட, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போனை இயக்கிக் கொண்டே வாழ்கின்றனர்.

அமெரிக்க ஆய்வு...
இதனால், உறவுகளுக்கிடையே விரிசல் அதிகமாகி வருவதாக அமெரிக்காவில் உள்ள பைலர் பல்கலைக்கழகத்தின் ஹன்காமர் தொழிற்பள்ளி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது.

விரிசல்...
இந்த ஆய்வில் அமெரிக்காவைச் சேர்ந்த 453 பேர் கலந்து கொண்டனர். இதில், செல்போன்களால் உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுவதாகவும், இதனால் வாழ்க்கையில் திருப்தியில்லாமல் மனிதர்கள் அல்லாடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

செல்போனிற்கு முக்கியத்துவம்...
பெரும்பாலும் கணவரும், மனைவியும் சேர்ந்திருக்கும் தருணங்களில் கூட அவர்களில் யாராவது ஒருவர் தன் செல்போனை ஆராய்ந்து கொண்டே பேசுவதாகவும், இதனால் தங்களது பேச்சுக்கு மதிப்பிருப்பதில்லை என்றும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம்...
மேலும், இந்த ஆய்வில் 36.6 சதவீதம் பேர் செல்போன்களால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications