தொழிற்சாலையை சுற்றி வளைத்த பிரான்ஸ் போலீஸ்: சாகத் தயாராக இருக்கும் தீவிரவாதிகள்
பாரீஸ்: சார்லி ஹெப்டோ அலுவலகத்தை தாக்கிய குவாச்சி சகோதரர்கள் பாரீஸின் Charles de Gaulle விமான நிலையம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்து கொண்டுள்ளனர். இதையடுத்து விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளான சைத் குவாச்சி (வயது 34), செரீப் குவாச்சி (32) ஆகியோர் Montagny பகுதியில் ஒரு காரைக் கடத்தி பின்னர் Dammartin-en-Goele என்ற இடத்தில் இருந்து ஒரு நபரை காருக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்களை பாரீஸுக்கு வட கிழக்கே போலீசார் கார்களில் விரட்டிச் சென்றனர். போலீஸ் ஹெலிகாப்டர்களும் தீவிரவாதிகளின் கார்களை தொடர ஆரம்பித்தன.
தப்பிச் சென்ற தீவிரவாதிகள் இருவரும் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியபடி காரை விரட்டிச் சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் பாரீஸின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்குள் புகுந்துவிட்டனர். அவர்களின் பிடியில் ஒரு பிணயக் கைதியும் உள்ளார். அவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் கூறி வருகின்றனர். இல்லாவிட்டால் இருவரும் சுட்டுக் கொல்லப்படுவர் என்று தெரிகிறது.
இதற்கிடையே Charles de Gaulle விமான நிலையத்தில் 2 ஓடுதளங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர விமான நிலையத்தின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது.