சர்வதேச அளவில் திடீரென முடங்கிய சாட்ஜிபிடி.. பயனர்கள் தவிப்பு.. என்ன காரணம்
டெல்லி: சர்வதேச அளவில் சாட் ஜிபிடி திடீரென முடங்கியுள்ளது. சாட்ஜிபிடியை பயன்படுத்த முடியாமல் அதன் பயனர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர். இந்தியாவில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் சாட் ஜிபிடியை பயன்படுத்த முடியாமல் போனதாகவும் தரவுகள் எதுவும் பெற முடியவில்லை எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
பிரபலமான செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி இன்று முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். இணைய நிறுவனங்களை கண்காணிக்கும் Downdetector தரவுப்படி, இந்தியாவில் மதியம் 2:45 மணிக்கு இந்த பிரச்சனை தொடங்கியது. 500-க்கும் மேற்பட்டோர் தளத்தை உபயோகிக்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்தனர்.

இந்தியாவில், 82% ChatGPT-யின் முக்கிய செயல்பாட்டில் பிரச்சனைகள் இருப்பதாகவும், 14% பயனர்கள் மொபைல் ஆப் பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறினர். 4% பேர் ஏபிஐ இணைப்பதில் சிரமம் இருந்ததாகத் தெரிவித்தனர். இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டும் இல்லை. அமெரிக்காவிலும் இதே போன்று பயனர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறினர்.
இந்தப் பிரச்சனையை எப்போது சரி செய்வோம் என்று ஓபன் ஏஐ நிறுவனம் இன்னும் கூறவில்லை. திடீரென முடங்கியதற்கான காரணத்தையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஓபன் ஏஐ அறிவிக்கவில்லை. பயனர்கள் சமூக வலைதளங்களில் ஏஐ முடங்கியதாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், " சாட் ஜிபிடி திணறுகிறது... இன்று பல பயனர்கள் (நானும் உட்பட) பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஓபன் ஏஐ என்ன களைப்பா? வேடிக்கை என்னவென்றால், #ChatGPT வேலை செய்யவில்லை என்பது பற்றி ஒரு ட்வீட் எழுதுமாறு கேட்டேன். அதுவும் தன்னை பற்றியே எழுதியது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications