மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் : இலங்கைக்கு சீனா திடீர் அட்வைஸ்
பீஜிங்: முதன்முறையாக இலங்கை அரசு மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதன் நட்பு நாடான சீனா அறிவுறுத்தியுள்ளது.
சிலநாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சார்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், தற்போது அதன் நட்பு நாடான சீனாவும் முதன்முறையாக இலங்கை மனித உரிமை பிரச்சினை குறித்து தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கியின் காங் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, ‘பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மாறுபட்டதாக இருக்கிறது.
எனவே இதில் முக்கியமானது என்னவென்றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு அனுகூலமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் எழுப்பிய பிரச்சினைகள் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுமா? எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு கியின் அளித்த பதிலில், ‘இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மனித உரிமை பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் பரஸ்பர புரிதல் ஏற்பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போதும் கூறிவருகிறோம்' என்றார்.
இலங்கை இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டு கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியையும் சீனா வழங்கியது.