சீனாவில் வழக்கத்திற்கு மாறாக தீவிரமாக பரவும் கொரோனா .. 5 நாளில் 1,500 அறைகளுடன் மருத்துவமனை ரெடி
பெய்ஜிங்: கொரோனா நோயாளிகளுக்காக 1,500 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனையை சீனா வெறும் ஐந்து நாளில் கட்டி முடித்துள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வடகிழக்கில் உள்ள ஹெய்லோங்ஜியாங் மற்றும் லியோனிங் மற்றும் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல கொத்துக்கொத்தாக காணப்படுகிறது. சமீபகாலமாக இந்த பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக பரவி வருவதாக சீன நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தொற்று நோய் அந்த பகுதியில் இருப்பது கண்டறியப்பட்ட போது, ஏற்கனவே அங்கு சமூக பரவல் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே இதை "கையாளுவது கடினம்," என்று சீன அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் தடுப்பது கடினம் என்றும் கூறுகின்றன.

கொரோனா பரவல்
வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் அல்லது பொருட்கள் மூலமாகவே சமீபகாலாமாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு ஆணையக்குழு குற்றச்சாட்டி உள்ளது. ஆனால் எப்படி பரவியது என்பதற்கான விவரங்களை வெளியிடவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட உணவு, பெரும்பாலும் உறைந்த மீன்களில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங் வரும் பயணிகள்
இதனிடையே பெய்ஜிங் வரும் பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கூடுதல் வாரம் "மருத்துவ கண்காணிப்புக்கு" உட்படுத்தப்படுவார்கள் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மருத்துவமனை உருவாகிறது
இதனிடையே பெய்ஜிங்கிற்கு தெற்கே உள்ள ஹெபாய் மாகாணத்தின் நாங்கோங்கில் மொத்தம் 6,500 அறைகள் அடங்கிய ஆறு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 1,500 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான ஒரு மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. வெறும் ஐந்தே நாளில் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்துமருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது.

மருத்துவமனை
நாங்கோங் மற்றும் ஹெபே மாகாண தலைநகரான ஷிஜியாஜுவாங்கில் மொத்தம் 645 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமூக பரவல் உள்ளதால் ஷிஜியாஜுவாங்கில் 3,000 அறைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications