அடித்தது "ரெட் வார்னிங்.." பதறும் அதிகாரிகள்.! சீனாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. இப்போ இது வேறயா
பெய்ஜிங்: சீனா வரிசையாக மக்கள்தொகை, திருமணம், குழந்தை பிறப்பு எனப் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது இன்னொரு பிரச்சினையில் மாட்டியுள்ளது.
சீனாவில் இப்போது தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கே மக்கள்தொகை சரிய ஆரம்பித்துள்ளது. இது வரும் காலத்தில் சீன பொருளாதார வளர்ச்சிக்குப் பிரச்சினையாக மாறும்.
அதேபோல திருமணம், குழந்தை பிறப்பு என அனைத்துமே தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அங்கே வரும் காலத்தில் வேலை செய்யும் வயதில் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சரியும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. இதைச் சரி செய்யச் சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வானிலை: இதற்கிடையே நமது அண்டை நாடான சீனாவிலும் வெப்பம் வைத்துச் செய்து வருகிறது. அங்கே அதீத வெப்பம் காரணமாக ரெட் வார்னிங் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் அளிக்கப்பட்டும் உச்சபட்ச வானிலை அலர்ட் இதுவாகும். பல லட்சம் பேர் வசிக்கும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 பாரன்ஹீட் வரை செல்லும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அங்கே நேற்று முன்தினம் வியாழக்கிழமை அந்நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் சென்றது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே அங்கே ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளன. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே கூட வர முடியாத ஒரு சூழலே நிலவுகிறது.
சீனா: பெய்ஜிங்கில் மக்கள் அதிகம் வசிக்கும் தெற்குப் புறநகர்ப் பகுதியில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கே வெப்பம் 41.1 டிகிரி செல்சியஸ் வரை சென்றுள்ளது. இதற்கு முன்பு அங்கு 1999, ஜூலை 24ஆம் தேதி அதிகபட்ச வெப்பம் 41.9 டிகிரி செல்சியசாக பதிவானது. அதன் பிறகு வெப்பம் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும்..
சீனா இப்போது நான்கு அடுக்கு வானிலை எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்துகிறது.. சிவப்பு என்பது மிகவும் கடுமையானது என அர்த்தம். அதைத் தொடர்ந்து ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் நீலம் என 3 வகையான அலர்ட் அமைப்புகள் உள்ளன. இதற்கிடையே தான் அங்கே இப்போது உட்சபட்சமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோசம்: அடுத்த எட்டு முதல் பத்து நாட்களுக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் அதிக வெப்பநிலை நீடிக்கும் என்று சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெய்ஜிங், தியான்ஜின், இன்னர் மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள்தொகையைக் கொண்ட வடக்கு சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜின் நகரில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
உலகின் பல பகுதிகளிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இப்படி தொடர்ச்சியாக அதீத வெப்பத்தை நாம் எதிர்கொள்ள நேர்ந்தால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்பும் கூட ஏற்படுத்தும். இதனால் பொதுமக்கள் தினமும் குறைந்தபட்சம் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications