எதிர்ப்புகளை மீறி சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பரப்பில் கலங்கரை விளக்கங்களை கட்டி முடித்தது சீனா!!
ஷாங்காய்: அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் எதிர்ப்பை மீறி தென்சீன கடற்பரப்பில் 2 புதிய கலங்கரை விளக்கங்களை சீனா அமைத்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
தென்சீன கடற்பரப்பு எரிவாயு வளம் அதிகம் கொண்டதாகும். இந்த கடற்பரப்பு முழுவதுமே தமக்கு சொந்தம் என்கிறது சீனா.
ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனே உள்ளிட்ட நாடுகளோ தங்களுக்கும் தென்சீன கடற்பரப்பில் உரிமை உண்டு என்கின்றன. இந்தியாவும் கூட தென்சீன கடற்பரப்பு முழுவதும் சீனாவுக்கு சொந்தமில்லை என கூறிவருகிறது.
அண்மையில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் தென்சீன கடற்பரப்பு விவகாரத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்நிலையில் தென்சீன கடற்பரப்பில் குவேட்டரோன், ஜான்சன் நிலப்பகுதிகளில் கலங்கரை விளக்கங்களை சீனா கட்டி முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கலங்கரை விளக்கங்கள் கட்டுவதற்கு தொடக்கம் முதலே அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் எதிர்த்து வந்த நிலையில் சீனா தற்போது 'நாங்கள் கட்டி முடித்துவிட்டோம்' என அறிவித்துள்ளது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க வைத்துள்ளது.