பூமிக்கு அடியில் 3.4 கிமீ.. வெறும் சூடு நீரை வைத்து சீனா புதிய சாதனை! அவிழ்க்கப்படும் மர்மங்கள்
பெய்ஜிங்: அண்டார்டிகாவின் உறைபனிப் பரப்புக்குக் கீழே, பல மில்லியன் ஆண்டுகளாக உலகத் தொடர்பே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பிரம்மாண்ட ஏரியைத் துளைத்து மிக பெரிய சாதனையை படைத்திருக்கிறது சீன ஆய்வாளர்கள் குழு! இதன் மூலம் கடந்த காலங்களில் உலகில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களை கண்டறிய முடியும்.
உலகெங்கும் இப்போது பல்வேறு ஆய்வுகளை சீனா முன்னின்று நடத்தி வருகிறது. அப்படி தான் பல ஆயிரம் ஆண்டுகளாக புவியில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிய சீனா ஒரு முக்கிய ஆய்வை நடத்தி காட்டியுள்ளது.

துளை
சீனாவின் 42வது அண்டார்டிகா ஆராய்ச்சிப் படையினர், கிட்டத்தட்ட 3,413 மீட்டர் (3.4 கிலோமீட்டர்) ஆழம் வரை 'வெந்நீர் துளையிடும்' அதிநவீன தொழில்நுட்பம் மூலம் துளைத்து. வேறு எந்தவொரு ஆய்வாளர்களும் இந்தளவுக்கு ஆழமான துளைத்ததே இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் சீன ஆய்வாளர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர். சீனாவின் இயற்கை வள அமைச்சகம் இந்த வரலாற்றுச் சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு உலக அளவில் பனிப்பாறைகளைத் துளைத்த அதிகபட்ச ஆழம் 2,540 மீட்டராக மட்டுமே இருந்தது. தற்போது சீனா அதனை விட 900 மீட்டர் கூடுதலாகத் துளைத்து சாதனை படைத்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம், அண்டார்டிகாவின் 90 சதவீத பனிப்பகுதிகளையும், ஒட்டுமொத்த ஆர்க்டிக் பனிப்பகுதியையும் மிக எளிதாகத் துளைக்க முடியும் என்பதை சீனா காட்டியுள்ளது.
ஏன் முக்கியம்
அண்டார்டிகாவின் கிழக்கு உட்பகுதியில் உள்ள 'டைஷான்' (Taishan) ஆய்வு மையத்திலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள கிலின் நிலத்தடி ஏரியில் தான் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இது அண்டார்டிகாவின் இரண்டாவது மிக பெரிய நிலத்தடி ஏரியாகும்.. இதற்கு சீனா 2022ல் முறைப்படி பெயரிட்டது. பல மில்லியன் ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சமோ, பூமியின் வளிமண்டலக் காற்றோ அண்டாத ஒரு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இதுவாகும்.
இங்குள்ள கடுமையான பனி அழுத்தம் மற்றும் நிரந்தர இருளுக்குள் வாழப் பழகிய விசித்திரமான நுண்ணுயிரிகள் அந்த ஏரிக்குள் வாழக்கூடும். இதன் நீர் வேதியியல் மற்றும் படுக்கை படிமங்கள் மூலம் பூமியின் பழங்காலக் காலநிலை மாற்றங்களை துல்லியமாகக் கணிக்க முடியும். மேலும், சூரிய குடும்பத்தில் உள்ள இதர கிரகங்களில் பனி ஓடுகளில் உயிர்கள் எப்படி வாழ முடியும் என்பதை ஆராயவும் இந்த ஏரி ஒரு உதவும்!
எப்படி துளைத்தனர்?
வழக்கமான மெஷன் மூலம் பனியைத் துளைத்தால், இயந்திரங்களின் எரிபொருட்கள் மற்றும் வெளிப்புறக் கிருமிகள் உள்ளே புகுந்து, பல மில்லியன் ஆண்டுகள் தூய்மையாக இருக்கும் ஏரியை அடியோடு கெடுத்துவிடும். இதற்காகச் சீனா முற்றிலும் ஒரு 'க்ளீன்' உத்தியைக் கையாண்டது.. அதாவது மேற்பரப்பில் உள்ள இயந்திரங்கள் மூலம் பனி உருகிய வெந்நீரைக் கடுமையான அழுத்தத்தில் நீண்ட குழாய்கள் மூலம் கீழே பாய்ச்சினர். அந்த வெப்பம் பனியைத் தொட்ட உடனே உருகி, சுத்தமான ஒரு மெகா துளையை உருவாக்கியது.
வெளிப்புறப் மாசுபாட்டைத் தவிர்க்க அந்தந்தப் பகுதியில் இருந்த பனிக்கட்டிகளையே எடுத்து, அதை உருக்கி இந்த வெந்நீர் உத்திக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி யுவான்ஷெங் கூறுகையில், "அதிவேக மற்றும் தூய்மையான இந்த ஆழ்துளை சோதனை, அண்டார்டிகா நிலத்தடி ஏரியின் நீர் மற்றும் படிம மாதிரிகளை எவ்வித வெளிப்புறக் கிருமிகளும் இன்றி நடத்த அனுமதிக்கிறது" என்றார்.
சீன ஆய்வாளர்கள் சொல்வது என்ன!
சீன அறிவியல் அகாடமியின் புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர் லு காய் கூறுகையில், "இந்த ஆழமான பனிப்பாறைகளின் உள்ளே பல லட்சம் ஆண்டுகால ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள் உறைந்து கிடக்கின்றன. கடந்த காலத்தின் உலகளாவிய பனி அளவு, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பநிலை மாற்றங்களை கண்டறிய இவை முக்கியமானது" என்றார்.
கடந்த பிப்ரவரி 5ம் தேதியே இந்த துளையிடும் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது ஏரிக்குள் கருவிகளை இறக்கி எவ்வித மாசுபாடும் இன்றி மாதிரிகளைச் சேகரிக்கும் அடுத்தகட்ட ஆபரேஷனுக்குச் சீனா தயாராகி வருகிறது. இந்த டேட்டா மற்றும் தொழில்நுட்பங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் சீனா சம்மதித்துள்ளது.












Click it and Unblock the Notifications