மாலத்தீவு விவகாரம்.. இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.. இந்தியாவை சீண்டும் சீனா?
பீஜிங்: மாலத்தீவு அதிபர் சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மாலத்தீவு உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட்டால் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சீனா பேசியுள்ளது.
சமீபத்தில் லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, லட்சத்தீவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவை மாலத்தீவை சேர்ந்த சில அரசியல்வாதிகள், மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து இருந்தனர். குறிப்பாக மாலத்தீவு அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் சியூனா மற்றும் அப்துல்லா மசூம் மஜித் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.

மாலத்தீவு அமைச்சர்கள்ள் பிரதமர் மோடியை இழிவாக விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், இப்ராகிம் முகமது சோலிக் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய கருத்துக்களால் இந்தியா - மாலத்தீவு இடையே நல்லுறவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
ஏற்கனவே, சீனாவுக்கு ஆதரவானவராக மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு அறியப்படும் நிலையில், தற்போது அவரது அமைச்சர்கள் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து விளக்கம் அளித்த மாலத்தீவு அரசு, "பிரதமர் மோடி குறித்து வெளியான தரக்குறைவான கருத்துகள் அரசின் கருத்து அல்ல. அது தனிப்பட்டவர்களின் கருத்து. இதில் சம்பந்தப்பட்ட 3 அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியது.
மாலத்தீவு அமைச்சர்களின் கருத்து சர்ச்சையான நிலையில், இந்தியர்கள் பலரும் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்தனர். சமூக வலைத்தளங்களில் மாலத்தீவுக்கு எதிரான பதிவுகள் டிரெண்ட் ஆனது. சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெருமளவு நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனாவின் உதவியை மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு நாடியுள்ளார்.
சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாக மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு சென்றிருந்தார். மொத்தம் சீனாவுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், இறுதி நாளான இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மாலத்தீவு அதிபரின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
இருநாட்டு நலன்களையும் கருத்தில் கொண்டு இருநாடுகளும் பரஸ்பரம் ஆதரவு அளித்துக்கொள்வது என மாலத்தீவும் சீனாவும் முடிவு செய்துள்ளன. மாலத்தீவின் தேசிய இறையாண்மை மற்றும் சுதந்திரம் மற்றும் கண்ணியம் நிலை நாட்டப்படுவதை சீனா ஆதரிக்கிறது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மாலத்தீவு தொழில் மன்றத்தில் உரையாற்றிய போது மாலத்தீவு அதிபர் கூறுகையில், "மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக சீனா உள்ளது. எங்கள் வளர்ச்சியின் முக்கிய பங்காளியாகவும் சீனா உள்ளது. மாலத்தீவு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை எல்லாம் சீனா மேற்கொண்டு வருகிறது. மாலத்தீவுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை சீனா ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications