எது சீனாவில் ராணுவ புரட்சியா? ஜி ஜின்பிங் அழுத்தமாக தந்த "மெசேஜ்!" உற்று பார்க்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: அண்டை நாடான சீனாவில் ராணுவ புரட்சி எல்லாம் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஜி ஜின்பிங் அதற்கு அழுத்தமாகப் பதில் கொடுத்து உள்ளார்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாடு 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.
சீனாவின் வருங்கால திட்டம் தொடர்பாக இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த மாநாட்டின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனா
கடந்த மாதம் சீனா குறித்துத் தொடர்ந்து பல்வேறு பரபர கருத்துகள் இணையத்தில் பரவியது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்று திரும்பிய ஜி ஜின்பிங் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அங்கு ராணுவ புரட்சி நடைபெற்றதாகவும் தகவல் பரவியது.

பரவிய வதந்தி
மேலும், பெய்ஜிங் நோக்கி சீன ராணுவம் திரண்டு வருவதாகவும் பெய்ஜிங்கில் முக்கிய இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளதாக எல்லாம் தகவல் பரவியது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்ப ஜி ஜின்பிங்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல கட்சியில் இருந்தும் எவ்வித விளக்கமும் தரப்படவில்லை. இது வதந்திகளை வலுப்படுத்துவதாக அமைந்தது.

வாய்ப்பே இல்லை
இந்தச் சூழலில் ராணுவ புரட்சி, வீட்டுக்காவல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் அருங்காட்சியகம் ஒன்றை ஆய்வு செய்தார். அதன் பின்னரே ஜீரோ கோவிட் கொள்கை காரணமாக வெளிநாடு சென்று திரும்பிய ஜி ஜின்பிங் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டது தெரிய வந்தது. ஜி ஜின்பிங்கிற்கு எதிராக ராணுவ புரட்சிக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

மக்கள் எதிர்ப்பு
இதனிடையே இதுபோன்ற வதந்திகளுக்கு அழுத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சியின் முக்கியமான தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங்கே கலந்து கொண்டு இருக்கிறார். இதில் அவர் சீனா கடந்த 5 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி, வரும் காலத்திற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விளக்க உள்ளார். மோசமான பொருளாதார வளர்ச்சி, கொரோனா, உலக நாடுகளுடன் அதிகரிக்கும் மோதல் காரணமாக ஜி ஜின்பிங்கிற்கு மீதான மக்கள் கோபம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதேபோல தைவான் விவகாரம், ஹாங்காங் இணைப்பு என்று உள்ளேயே பல பிரச்சினைகள்.

செல்வாக்கு
இதனால் அதிருப்தியில் இருக்கும் சீன மக்கள், மிகவும் அரிய நிகழ்வாக ஜி ஜின்பிங்கை எதிர்த்து போராட்டம் நடத்தினர். ஆனாலும், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு பெரிய அளவில் இல்லை. ஏனென்றால் கடந்த 2012இல் அதிபர் பதவி ஏற்றது முதலே கட்சிக்குள் தனது செல்வாக்கை வளர்த்தார். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஊழல் ஒழிப்பு என்று கூறி கட்சியில் இருந்தே நீக்கினார்.

சலசலப்பு
69 வயதான ஜி ஜின்பிங் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே இருந்து உள்ளது. உய்குர் முஸ்லிம்கள் விவகாரம், ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டத்தை நசுக்குவது, ஜீரோ கோவிட் என்று அவரது செயல்பாடுகள் விமர்சனத்தையே சந்தித்து வருகிறது. இருந்த போதிலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கிரேட்டர் சீனா என்ற இலக்கை நோக்கி நகர அடுத்த கட்ட திட்டங்களுடன் அவர் தாயாராகிவிட்டார்.












Click it and Unblock the Notifications