இந்தியா-பாக் இடையே போர் வந்தால் சீனாவின் ரோல் எப்படி இருக்கும்? விஷயம் இதுதான்
டெல்லி: பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் போர் வந்தால் சீனா எப்படி செயல்படும் என்பது பற்றி நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
சீனாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அப்படியெனில் போர் சூழல் உருவானால் நிச்சயமாக பாகிஸ்தானுக்கு சீனா உதவும்.

சீனா-பாகிஸ்தான் உறவு என்பது 'எல்லா காலங்களிலும் நட்பு உறவு' என்கிற அடிப்படையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தியா-சீனா 1962ம் ஆண்டு போருக்கு பிறகு இது வலுவடைந்தது. மறுபுறம் பாகிஸ்தானின் உள்நாட்டு கட்டமைப்புகள் மீது சீனா கணிசமான அளவில் முதலீட்டை செய்திருக்கிறது. குறிப்பாக 'பொருளாதார பாதை' திட்டம் மூலம் சுமார் 6 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருக்கிறது. தவிர, பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் JF-17 Thunder உள்ளிட்ட போர் விமானங்களையும், ஆயுதங்களையும் சீனா வழங்கி உதவியிருக்கிறது. இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சியையும் மேற்கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் போர் என வந்தால் சீனாவின் ஆதரவு இல்லாமல் இருக்காது. ஆனால் நேரடியாக ஆயுத உதவியை சீனா செய்யாது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். காரணம் சீனாவுக்கு இப்போது நிலைமை சரியாக இல்லை. சர்வதேச அளவில் வர்த்தக போரால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதங்களை கொடுத்தால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். எனவே இப்படியான முட்டாள்தனத்தை சீனா செய்யாது. அதற்கு பதிலாக புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளில் சீனா இறங்கும். தனது செயற்கைக்கோள்களை பயன்படுத்தி உளவு தகவல்களை பாகிஸ்தானுக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படும். சீனாவின் உளவு செயற்கைக்கோள்கள் மிகவும் உயர்திறன் கொண்டவை. பூமியில் உள்ள நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுப்பதுடன், பூமியல் உள்ள மனிதனின் முக பாவனை எப்படி இருக்கிறது என்பதை கூட இது கண்டுபிடிக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோல சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுக்கும். குறிப்பாக ஐநா உள்ளிட்ட மன்றங்களில் இந்தியாவை குற்றவாளியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் சீனா செய்யும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை உடைத்து, அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல இந்தியாவுடன் போரிட்ட அனுபவம் சீனாவுக்கு ஏற்கெனவே இருக்கிறது. எனவே போர் தந்திரத்தை பாகிஸ்தானுடன் பகிர்ந்துக்கொள்ளும்.
இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனில், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் சீன ராணுவம் குடைச்சல் கொடுக்க தொடங்கலாம். இது இந்தியாவுக்கு இரட்டை தலைவலியாக மாறும். இதைத்தாண்டி பெரியதாக சீனாவால் செய்துவிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications