ஷாங்காய் நகரில் ஒட்டுமொத்தமாக ராணுவத்தை இறக்கிய சீன அரசு.. குழப்பத்தில் மக்கள்! என்ன காரணம் தெரியுமா
பெய்ஜிங்: சீனாவில் பொருளாதார ரீதியாக மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகருக்குச் சீனா அரசு ராணுவத்தை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ்- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளைப் புரட்டிப்போட்ட ஒன்றாக இதுவே உள்ளது. இதனால் வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால் இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்ற நாடுகளை மிக மோசமாகப் பாதித்துள்ளன.

கொரோனா
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உலக நாடுகளை மிக மோசமான ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றன. இதில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கூட தப்பவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக அமெரிக்க பொருளாதாரம் கடந்த 2020 சரிந்தது. இருப்பினும், கொரோனா முதலில் பரவிய சீனா மட்டும் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020இல் நல்ல முறையிலேயே இருந்து வந்தது.

சீனா
கொரோனா வேக்சின் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின்னர், உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தது. இருப்பினும், சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக இருந்து ஓமிக்ரான் கொரோனாவே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இல்லாத அளவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயரும் கொரோனா
குறிப்பாகச் சீனாவின் முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான ஷாங்காயில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள2.5 கோடி மக்களுக்கு அடுத்த 36 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு உதவும் வகையில் 20 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 2,000 ராணுவ வீரர்களை ஷாங்காய் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

சீன ராணுவம்
இதையடுத்து நேற்று முதல் நகரில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்யும் பணிகளைச் சீன அரசு தொடங்கியது. மருத்துவ உதவிகளைச் செய்யும் தேவையான மருந்துகளை விரைவாக அனுப்பவும் சீன ராணுவம் தனது மிகப் பெரிய ராணுவ விமானங்களில் ஒன்றான Y-20ஐ சீனா களமிறக்கி உள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது ஷாங்காய் நகரின் மருத்துவ கட்டமைப்பின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

மோசம்
ஷாங்காய் நகரில் நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவ மருத்துவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. ஷாங்காய் நகரில் இப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த நகரமும் அப்படியே முடங்கி உள்ளது. இதனால் ஷாங்காய் நகரம் பேய் நகரம் போலக் காட்சியளிக்கிறது.

புதிய ஓமிக்ரான்
சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,137 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, அதில் ஷாங்காய் நகரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு உயர புதிய வகை ஓமிக்ரான் வைரஸே காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனை ஓமிக்ரான் BA.1.1 என்று ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தி உள்ளனர். இது வழக்கமான ஓமிக்ரான் கொரோனா போலவே தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications