அமெரிக்காவை காலி செய்யும் சீனா? டிரம்ப் வரிக்கு பதிலடி ஆரம்பம்.. வெடிக்கும் புதிய வர்த்தக போர்?
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது திடீரென 100% வரிகளை விதிப்பதாக உத்தரவிட்டார். இது இரு தரப்பு வர்த்தக உறவுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துள்ள சீனா, தேவைப்பட்டால் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ளது. மேலும், முதற்கட்டமாக அமெரிக்கக் கப்பல்களுக்குத் துறைமுகக் கட்டணத்தை உயர்த்த போவதாகவும் சீனா அறிவித்துள்ளது.
சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 100% வரி விதிப்பதாக அவர் அறிவித்தார். மேலும், அமெரிக்காவில் உருவாக்கப்படும் சாப்ட்வேர்களின் ஏற்றுமதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா- சீனா மோதல்
இது அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக மோதலை மீண்டும் உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைத் தன்னிச்சையானது என்றும் இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டி சீனா பதிலடி கொடுத்துள்ளது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையைச் சாடி சீன வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனா அறிவிப்பு
சீன நலன்களுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருப்பதாகவும் இது இருதரப்பு பொருளாதார & வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைச் சிதைப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த முடிவு இரட்டை நிலைப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் சீன வர்த்தகத் துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது. சீனா ஒருபோதும் சண்டையிட விரும்பவில்லை என்ற போதிலும் சண்டையிடப் பயப்படவும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், தேவைப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
பின்னணி
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் சீனா மீதான வரிகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். வர்த்தகத்தில் சீனா மிகவும் மோசமான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இதனால் இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார். அவர் மேலும், "நவம்பர் 1ம் தேதி முதல், சீனா மீது 100% கூடுதல் வரியை விதிக்கிறோம்.. இது அவர்கள் தற்போது செலுத்தும் எந்தவொரு வரியையும் விட அதிகமாகும்" என்று அறிவித்தார்.
சீனா சமீபத்தில் தான் ரேர் எர்த் மெடல் (rare earth elements) மீதான ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடியாகவே டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளார். சர்வதேச அளவில் பல்வேறு தொழில்நுட்ப உற்பத்திக்கு ரேர் எர்த் மெடல்கள் அத்தியாவசியமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தத் தாதுக்கள் மீதான சீனாவின் நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தைப் பணய கைதியாகப் பிடித்து வைக்கும் முயற்சி என்று ட்ரம்ப் சாடினார்.
வல்லுநர்கள் எச்சரிக்கை
அதேநேரம் டிரம்ப்பின் இந்த புதிய வரி விதிப்பு அமெரிக்க மக்களைப் பாதிக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மின்சாரப் பொருட்கள் முதல் ஈவி கார்கள் வரை பல்வேறு துறைகளிலும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே டிரம்ப்பின் முந்தைய வரிகளால் இந்தத் துறைகள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கூடுதல் வரி நிலைமையை மேலும் மோசமாக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கக் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டணம்
டிரம்ப்பின் வரிகளுக்குச் சீனா பதிலடியை ஆரம்பித்துவிட்டது. இது தொடர்பாகச் சீன வர்த்தக அமைச்சகம், "அமெரிக்கா தான் முதலில் சீனாவுக்கு எதிராகப் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பல சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பல சீன நிறுவனங்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அதிக வரி விதிப்போம் என்று அச்சுறுத்துவது சரியான வழிமுறை இல்லை. அமெரிக்கா தனது தவறான நடவடிக்கைகளை உடனடியாகச் சரிசெய்து, சீனா- அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை நிலைநிறுத்தத் தேவையான வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களுக்குத் துறைமுகக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. இது அத்தியாவசிய தற்காப்பு நடவடிக்கை என்று சீனா விளக்கமளித்துள்ளது. மேலும், அமெரிக்கா தனது போக்கைத் தொடர்ந்தால்.. சீனா தனது நலன்களைப் பாதுகாக்கப் பதில் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications