உலகையே மாற்ற போகும் சீனா.. புதைந்து கிடக்கும் 2000 டன் தங்க குவியல் கண்டுபிடிப்பு! செம ஜாக்பாட்
பெய்ஜிங்: சீனா தனது நாட்டில் புதைந்து இருக்கும் தங்க இருப்புகளை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே வெறும் சில மாத இடைவெளியில் தனது நாட்டில் புதைந்துள்ள 2000 டன் தங்க இருப்பை சீனா கண்டறிந்துள்ளது. இரு வேறு மாகாணங்களில் புதைந்து கிடக்கும் இந்த தங்கம் முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டால் அது சீனா பொருளாதாரத்தையே மொத்தமாக மாற்றும்.
இப்போது உலகில் புவிசார் அரசியல் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. டிரம்பின் அதிபரான பிறகு அவர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவுகளும் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் நாளைய தினம் முதல் ரெசிப்ரோக்கல் வரியை டிரம்ப் அறிவிக்கிறார். இது கிட்டதட்ட ஒரு வணிக போருக்கு இணையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

தங்கம்
முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதற்கு முன்பு வரை டாலர் தான் அனைத்து நாடுகளின் அந்நிய செலாவணியாக இருந்து வந்தது. ஆனால், ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய சமயத்தில் ரஷ்யாவிடம் இருந்த அந்நிய செலாவணியை பயன்படுத்த முடியாமல் அமெரிக்கா முடக்கியது.
இதனால் எங்கு வரும் காலத்தில் தங்களுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படுமோ என்று அஞ்சிய உலக நாடுகள் தங்கத்தில் தங்கள் கவனத்தை திரும்பின. குறிப்பாக ரஷ்யா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடந்த சில காலமாகவே தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.
சீனாவின் நிலைப்பாடு
சீனா அடுத்த கட்டமாக தனது நாட்டில் புதைந்து இருக்கும் தங்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இப்போது ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் புவிசார் அரசியல் பதட்டங்கள், மற்றொருபுறம் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படும் அச்சம் என பல குழப்பங்களுக்கு இடையே தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக மாறியதே இதற்கு காரணமாகும்.
2000 டன் தங்கம்
இதற்கிடையே சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இப்போது மாபெரும் தங்க குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய தங்க இருப்பு, கிழக்கிலிருந்து மேற்காக 3,000 மீட்டருக்கும் அதிகமாகவும், வடக்கிலிருந்து தெற்காக 2,500 மீட்டருக்கும் அதிகமாகவும் பரவியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இடத்தில் சுமார் 1000 டன் தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடியாகும்.
அதேநேரம் சீனாவில் சமீப காலங்களில் இதுபோன்ற மாபெரும் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுமார் 1,000 டன்களுக்கு மேல் கொண்ட தங்க இருப்பு கண்டறியப்பட்டது. அது சுமார் 600 பில்லியன் யுவான் ($83 பில்லியன்) மதிப்புடையது. 3D புவியியல் கண்காணிப்பு உள்ளிட்ட புதிய ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் மூலமே இந்த தங்க இருப்புகளை கண்டறிந்துள்ளது. இது சீனாவுக்கு அடித்துள்ள மாபெரும் ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.
மேற்குலக நாடுகள் சந்தேகம்
இருப்பினும், மேற்குலக நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் சீனாவின் கண்டுபிடிப்பு குறித்து சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். தங்க இருப்பு இருக்கலாம் என்ற போதிலும் 1000 டன் என்ற அளவுக்கு ஒரே இடத்தில் குவிந்து இருக்க வாய்ப்பு குறைவு என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications