ஈரானுக்கு ஆயுதங்களை வாரி வழங்கிய சீனா? ரகசியமாக தரையிறங்கிய 4 சரக்கு விமானங்கள்! டென்ஷனில் அமெரிக்கா
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமெரிக்கா தனது 2 போர் கப்பல்கள், போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் தான் சீனாவுக்கு சொந்தமான 4 சரக்கு விமானங்கள் ரகசியமாக ஈரானில் தரையிறங்கி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் கடந்த 7 ம் தேதி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இருநாடுகள் இடையே பாகிஸ்தானில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளையும் ஈரான் ஏற்கவில்லை. சில விஷயங்களில் இருநாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டாலும் முழு பேச்சுவார்த்தையும் வெற்றி பெறவில்லை.

இருப்பினும் எதிரெதிர் துருவங்களாக இருந்த இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கான டேபிளில் அமர்ந்தது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. அதோடு இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. ஆனால் அமெரிக்கா மோதல் மீண்டும் வலுத்துள்ளது. திறக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் அதில் உள்ள வீரர்கள், போர் விமானங்களை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்று ஈரான் கூறியது. அதனை ஏற்காததால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் 4 சீனா சரக்கு விமானங்கள்
இதற்கிடையே தான் ஈரானில் திடீரென்று சீனாவின் 4 சரக்கு விமானங்கள் தரையிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் மரியோ நவ்பல் முக்கிய விஷயத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில், ''சீனாவின் 4 சரக்கு விமானங்கள் ரகசியமாக ஈரானில் தரையிறங்கி உள்ளன. இந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு முன் தங்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை யாரும் கண்காணிக்காமல் இருக்க ட்ரான்ஸ்பாண்டர்களை 'ஆஃப்' செய்துள்ளது'' என்றார்.
ரகசியமாக தரையிறக்கம்
மேலும் 4 சீன சரக்கு விமானங்களும் டிரான்ஸ்பாண்டர்களை ஆஃப் செய்து ஈரானில் தரையிறங்கி உள்ளது. 'டிரான்ஸ்பாண்டர்கள்' என்பது ஒரு விமானத்தின் இருப்பிடத்தை கண்காணிக்க உதவும்.
இதன்மூலம் விமானங்கள் வானில் மோதிக்கொள்வது தவிர்க்கப்படும். வானில் பறக்கும்போது அனைத்து விமானங்களும் இந்த 'டிரான்ஸ்பாண்டர்களை' ஆன் செய்து வைத்திருக்கும். ஆனால் சீனா, அதனை 'ஆஃப்' செய்து ஈரானில் தனது 4 சரக்கு விமானங்களை ரகசியமாக தரையிறக்கி உள்ளது.
ஈரானுக்கு ஆயுதங்கள்?
இதனால் தான் ஏதோ மர்மம் இருப்பதாக வல்லுநர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் 4 விமானங்களின் 'டிரான்ஸ்பாண்டர்களும்' செயல்படவில்லை என்பதால் அதன் பின்னணியில் தொழில்நுட்ப கோளாறு இருக்க வாய்ப்பில்லஎன்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தான் சீனாவில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்கள் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் சீனாவும், ஈரானும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் தான் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.இருப்பினும் தற்போது வரை இதுபற்றி ஈரான் அல்லது சீனா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.
டிரம்ப் வார்னிங்கிற்கு நடுவே..
முன்னதாக ஈரானுக்கு, சீனா உதவிகள் செய்வதாக பல செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் கோபமான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு சீனா உதவினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வார்னிங் செய்திருந்தார். இதுபற்றிசீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கடந்த 22ம் தேதி மறுத்து இருந்தார்.
அதுமட்டுமின்றி ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தார். ஆனால் அவர் கூறிய அடுத்த நாளிலேயே ஈரானில் அந்த நாட்டின் 4 சரக்கு விமானங்கள் ரகசியமாக தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த விவகாரம் அமெரிக்காவை டென்ஷனாக்கி உள்ளது.















Click it and Unblock the Notifications