சட்டை ஜிப்பில் சிக்கிய இமைகள்... தீயணைப்பு வீரர்கள் உதவியால் மீட்கப்பட்ட சிறுவன்
சீனாவில் சட்டை ஜிப்பில் கண் இமைகள் சிக்கிக் கொண்ட சிறுவனை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவனின் கண் இமைகளில் அவனது சட்டை ஜிப்பில் சிக்கிக் கொண்டது. தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மருத்துவர்கள் அதனை அகற்றி, சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் ஜிகான்சு மாகாணத்தில் உள்ளது சுழு நகரம். இங்கு வாழும் சிறுவன் ஒருவன் கடந்த வாரம் தனது மேல் சட்டையை கழட்டும் போது எதிர்பாராதவிதமாக, அதில் இருந்த ஜிப் அவனது கண் இமைகளில் சிக்கியது.
சிறுவனின் பெற்றோர் எவ்வளவோ முயற்சித்தும் ஜிப்பை கழட்ட முடியவில்லை. இதனால் சிறுவனின் கண்ணிற்கு பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சிய அவர்கள் உடனடியாக மருத்துவரிடம் அவனை அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனின் இமைப்பகுதியில் ஜிப் ஆபத்தான முறையில் மாட்டியிருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், முதலில் சட்டையை வெட்டி ஜிப்பை தனியாகப் பிரித்தனர். பின்னர், தீவிர முயற்சிகளுக்கு பின்னர் ஒருவழியாக கண் இமைகளில் சிக்கியிருந்த ஜிப் தனியே வந்தது.
அதனைத் தொடர்ந்து இமையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கண் இமை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, குழந்தைகளை எப்போதும் பெற்றோர் உடனிருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
காயமடைந்த சிறுவன் பள்ளி மாணவன் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அச்சிறுவனின் வயதை அவை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.