பிறக்கப் போகுது "செம்மறி ஆடு" ஆண்டு – அதற்குள் பிள்ளை பெற அலை பாயும் சீனப் பெண்கள்!
பெய்ஜிங்: சீனாவில் அடுத்ததாக பிறக்க உள்ளது செம்மறி ஆடு ஆண்டு என்பதால் பல கர்ப்பிணிகள் அதற்கு முன்னதாகவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
சந்திரனை அடிப்படையாக கொண்டு 12 ஆண்டுகளாக சீன காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் குறிப்பிடப்படுகிறது.
முடியும் குதிரை ஆண்டு:
அந்த வகையில் தற்போது நடைபெறுவது குதிரை ஆண்டு ஆக உள்ளது. அடுத்து பிறக்க போவது செம்மறி ஆடு ஆண்டு.
அதிர்ஷ்டம் அற்ற செம்மறி ஆண்டு:
அந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பிறக்கிறது. அந்த ஆண்டில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டம் அற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
குழந்தை பெற அச்சம்:
எனவே தற்போது கர்ப்பிணி ஆக உள்ள பெண்கள் அடுத்த ஆண்டு குழந்தை பெற அச்சப்படுகின்றனர்.
பெற்றோர்கள் திட்டம்:
தங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுவார்களோ என அஞ்சுகின்றனர். எனவே, அடுத்த ஆண்டில் தங்கள் குழந்தைகள் பிறப்பதை தடுக்க பல பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சிசேரியன் மூலம் பிரசவம்:
அதன்படி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு முன்பே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு குழந்தை பிறப்பு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறப்பு சான்றிதழ் தட்டுப்பாடு:
மேலும் பலர் இப்போதே குழந்தை பிறப்பு சான்றிதழ்களை பெற தீவிர முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் சில மாகாணங்களில் பிறப்பு சான்றிதழ்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.