சீன 'நாய் கறி' திருவிழாவில் இருந்து தப்பி பிழைத்து கனடாவுக்கு 'எஸ்கேப்' ஆன நாய்கள்!
சீனாவில் நாய் கறி திருவிழாவுக்கு பலிகொடுக்க வைத்திருந்த நாய்களை கனடா விலங்குகள் நல அமைப்பினர் காப்பாற்றினர். அவை தற்போது கனடா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குவாங்ஸி : சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் நாய்கறி திருவிழாவுக்கு பலிகொடுக்க வைத்திருந்த 100க்கும மேற்பட்ட நாய்களை கனடா விலங்குகள் நல அமைப்பினர் காப்பாற்றியுள்ளனர். அந்த நாய்கள் கனடாவில் இனி சுதந்திர மாக வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 'நாய் கறி திருவிழா' உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 2 கோடி நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் இந்த திருவிழா இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
சீனாவின் குவாங்ஸி என்ற மாகாணத்தில் யூலின் என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த வித்தியாசமான திருவிழாவை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆவிகள், நோய்களில் இருந்து விடுவிக்க
விநோத பழக்க வழக்கங்களை கொண்ட இந்த மக்கள் தங்களை வரும் குளிர்நாட்களை தாக்குப்பிடிக்க இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் ஆவிகள் மற்றும் கொடிய நோய்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள 'நாய் கறி திருவிழா' என்ற இந்த விநோத விழாவை கொண்டாடி வருகின்றனர்.
பிடித்து பூஜைக்குள்ளாக்கப்படும் நாய்கள்
நாய்கறி திருவிழா நெருங்கும் நாட்களில் குவாங்ஸி மாகாணம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை யூலின் இன மக்கள் பிடித்து வருவார்கள். பின்னர் அந்த நாய்களை வைத்து அவர்கள் பூஜை செய்வார்கள் எனத் தெரிகிறது.
தீயில் சுடப்படும் நாய்கள்
பின்னர், ஒவ்வொரு நாயும் கும்பல் கும்பலாக கொன்று நெருப்பில் சுட்டு எரிக்கப்படுகிறது. எரிக்கப்பட்ட நாய்கள் சிறு துண்டுகளாகவும் முழு நாய்களாகவும் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கின்றனர்.
நாய்கறி விருந்து அமோகம்
இந்த பகுதியில் வாழும் யூலின் சமுதாய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவின் அன்று நாய் கறி விருந்து அமோகமாக நடைபெறும்.
அந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆண்மையை அதிகரிக்கும் நாய்கறி
சில ஆண்கள் நாய்கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என நம்புகின்றனர். இதனால் அவர்கள் இந்த உணவை விரும்பி ருசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்ப்புகளுக்கு அசராத சீனர்கள்
சீனர்களின் இந்த விநோத திருவிழாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் ஆண்டுதோறும் அசராமல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
பரவும் ரேபிஸ் நோய்
இந்த பகுதிக்கு பல வகை நாய்களை அதிக எண்ணிக்கையில் கும்பல் கும்பலாக வாகனங்களில் அடைத்து கொண்டுவரப்படுகிறது. இதனால் இங்கு
'ரேபிஸ்' எனப்படும் நோய் அதிக அளவில் பரவி வருவது அந்த சமுதாய மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை.
அதிரடி ரெய்டு நடத்திய கனடா
இந்த ஆண்டு திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கனடாவைச் சேர்ந்த சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் யுலின் பகுதிக்கு சென்றனர்.
மீட்கப்பட்ட நாய்கள்
அங்கு 110 நாய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவற்றுக்கு தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.கனடாவில் இந்த நாய்கள் சுதந்திரமாக வாழும் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
2 கோடி நாய்கள் கொலை
சீனாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு உணவாக சமைக்கப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ரேபிஸ் நோய் தாக்கி சுமார் 338 பேர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.