அடப்பாவிகளா இதுலையும் போலியா... உப்பு தண்ணீரை கொண்டு போலி கொரோனா தடுப்பூசி... சீன கும்பல் கைது
பெய்ஜிங்: உப்புத் தண்ணீரைக் கொண்டு போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விற்றுவந்த கும்பலைச் சீன காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உலகில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் தொடர்ந்தே வருகிறது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்களும் வைரஸ் பரவலை அதிகப்படுத்தியுள்ளது. பிரிட்டன் வகை கொரோனா மற்ற வகைகளை விட சுமார் 50% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி மட்டுமே தற்போது ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபைசர், மாடர்னா, ஸ்புட்னிக் வி, கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கும் பல நாடுகள் அனுமதி அளித்துள்ளன.

போலி தடுப்பூசி
அதன்படி சீனாவில் சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உப்புத் தண்ணீரைக் கொண்டு போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விற்றுவந்த கும்பலைச் சீன காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் முதலே இதுபோன்ற போலி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, விற்று வந்தது தெரியவந்துள்ளது.

அதிரடி சோதனை
இது தொடர்பாகச் சீன போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை 80பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல போலியான தடுப்பூசி எவ்வளவு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த தகவலைச் சீன போலீசார் வெளியிடவில்லை. ஆனால், இவை எங்கு விற்பனை செய்யவிட்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் அங்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலி தடுப்பூசி டோஸ்களையும் சீன போலீசார் கைப்பற்றினர்.

சீனாவின் தடுப்பூசி
சீன நிறுவனமான சினோபார்மின் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளன. இருப்பினும், இந்தத் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்களுக்குத் தயக்கம் நிலவுகிறது. சினோபார்ம் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று சீன அரசு தொடர்ந்து கூறிவந்தாலும், தடுப்பூசி சோதனை முடிவுகளை இதுவரை வெளியிடவில்லை. மேலும், கடந்த சில நாட்களாகச் சீனாவிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அந்நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கொரோனா தோற்றம்
உலகை தற்போது ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனாவுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு சிறப்பு வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு தற்போது வூஹான் நகரில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications