"ஒத்த ரூபாய்"க் கட்டாக 10 லட்சத்தை கொட்டி பிஎம்டபிள்யூ கார் வாங்கிய சீனப் பெண்!
ஜெங்ஸோ, சீனா: சீனாவில் ஹோட்டல் நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு பெண் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார். இதில் விசேஷம் இல்லை.. ஆனால் அவர் அதற்கான அட்வான்ஸ் பணத்தை சில்லறையாக கொண்டு வந்து கொட்டி டீலரையே பீதிக்குள்ளாக்கி விட்டதுதான் செய்தியே!
நட்புக்காக படத்தில் நாட்டாமை விஜயக்குமாரும், சரத்குமாரும் சேர்ந்து மூட்டை நிறைய பணத்தைக் கொண்டு வந்து கொட்டி கார் வாங்குவார்களே.. அந்தக் கதையின் ரீமேக் போல உள்ளது இந்தக் காட்சி!
மொத்தம் இந்திய மதிப்பில் பத்து லட்சத்து 21 ஆயிரத்து 701 ரூபாய் பணத்தை அவர் சில்லறையாக கொண்டு வந்து கொடுத்ததால் கார் டீலர் மலைத்துப் போய் விட்டார். ஆனால் கார் வாங்க வந்த கஸ்டமராச்சே.. விட முடியுமா.. எனவே ஆட்களை வைத்து எண்ணி பணத்தைப் பெற்றுக் கொண்டு காரைக் கொடுத்துள்ளனர்.
இந்தப் பணத்தை எண்ணும் பணியில் மொத்தம் 20 பேர் ஈடுபட்டனர். காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கிய நோட்டுக்களை எண்ணும் பணி பிற்பகலையும் தாண்டி 3.30 மணிக்குத்தான் முடிந்ததாம். நோட்டை எண்ணிய அத்தனை பேரும் வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டார்களாம்.
அந்தப் பெண்மணி அந்த ஊரின் ஒரு யென் நோட்டாக மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து கொட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்ஸோ என்ற நகரில்தான் இந்தக் காமெடிக் காட்சி நடந்தேறியது. இப்படிப் பணத்தைக் கொட்டி கார் வாங்கிய பெண் யார் என்பதை அந்த கார் டீலர் தெரிவிக்கவில்லை.
அப்பெண் சாலையோரம் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறாராம். சிறிய ஹோட்டல்தான். அதில் சம்பாதித் பணத்தை கொண்டு கார் வாங்கியுள்ளார். தனக்கு வ வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை அப்படியே சேர்த்து வைத்து கொண்டு வந்து கொடுத்ததாக அவர் கூறினாராம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லீ மோரன் கூறுகையில், எங்களது வாழ்க்கையில் இவ்வளவு பணத்தை இத்தனை மணி நேரம் எண்ணியதில்லை. இதுதான் முதல் அனுபவம். ஆனால் மிகவும் நல்ல அனுபவம் என்றார் சிரித்தபடி.
இப்போது இந்த செய்தி சீனாவில் வைரல் ஆகியுள்ளதாம்.