பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்த கிறிஸ்தவ தம்பதி அடித்துக் கொன்று, செங்கல் சூளையில் எரிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாகக் கூறி கிறிஸ்தவ தம்பதியை முஸ்லீம்கள் அடித்துக் கொன்று அவர்களின் உடல்களை செங்கல் சூளையில் வைத்து எரித்துவிட்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் உள்ளது கோட் ராதா கிஷன் நகர். அங்கு உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தவர்கள் ஷெசாத் மாசி(35), ஷாமா(31). கிறிஸ்தவ தம்பதியான அவர்களுக்கு செங்கல் சூளை உரிமையாளரான யூசுப் குஜ்ஜார் ஒழுங்காக சம்பளம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர்களுக்கும் யூசுப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் செங்கல் சூளை வளாகத்தில் வசித்து வந்த அவர்களின் வீட்டு குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் சில பக்கங்கள் எரிக்கப்பட்டு கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து யூசுப் செவ்வாய்க்கிழமை அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அங்கு கூடினர். சிலர் கதவை உடைத்துக் கொண்டு அந்த தம்பதியை இழுத்து வந்து அடித்துக் கொன்றனர். பின்னர் அவர்களின் உடல்கள் செங்கல் சூளையில் வைத்து எரிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்களின் உடல்கள் எரிந்துவிட்டன.
இது குறித்து போலீசார் 460 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர மேலும் பல குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார் பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப். மேலும் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications