என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus
Recommended Video
பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில், தங்களை காப்பாற்ற மத்திய அரசு முயல வேண்டும் என வுகான் மாகாணத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
இதுபற்றி, கிருஷ்ணமூர்த்தி என்ற மாணவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எங்கள் பல்கலைக்கழகத்தில் என்னுடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கு நாங்கள்தான் வெளியே செல்ல வேண்டியதாக இருக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை வெளியே சென்று காய்கறி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சீன அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அவர்கள் தெரிய படுத்தி வருகின்றனர். நாங்கள் அறைகளுக்குள் இருக்கும்வரை எங்களுக்கு பிரச்சனை கிடையாது. ஆனால், வருங்காலத்தில் எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
இந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதற்கு எங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் இந்தியா வந்த பிறகு, 14 நாட்கள் தனி வார்டில் வைத்து கண்காணித்தாலும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
வூகான் நகரை முழுமையாக சீல் வைத்து விட்டது சீனா அரசு. எனவே இங்கிருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. சீன அரசு ஒப்புக் கொண்டால் உடனடியாக நாங்கள் உங்களை இந்தியா கூட்டிச் செல்ல தயார் என்று இந்திய தூதரக அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வூகானில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருக்கிறது. சீனா அனுமதி கொடுத்ததும் இந்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். ஆனால் இதுவரை சீனா, வூகானிலிருந்து யாரையும் வெளியே அனுப்ப தயாராக இல்லை. எல்லோரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு சீனா எச்சரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications