முதலில் 18.. அடுத்து 20.. ரஷ்யாவில் வெற்றிபெற்ற கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை.. என்ன நடந்தது?
மாஸ்கோ: உலகிலேயே கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்து முடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த சோதனை எப்படி நடந்தது என்பது தொடர்பாக கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து மனிதர்கள் மீது வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்து இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சி முழுமையான மனித ஆராய்ச்சி முடிவா அல்லது முதற்கட்ட மனித ஆராய்ச்சி முடிவா என்பதில் சில குழப்பங்கள் நிலவி வருகிறது.
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து? மனித சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த ரஷ்யா.. அதிரடி!
என்ன தடுப்பு மருந்து
இந்த தடுப்பு மருந்து கடந்த ஜூன் 18ம் தேதியில் இருந்து மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக இந்த மருந்து விலங்குகள் மீது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.மொத்தம் 38 பேர் மீது இந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. ஜூன் 18ம் தேதி 18 பேர் மீதும், ஜூன் 23ம் தேதி 20 பேர் மீதும் இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்து இருக்கிறார்கள்.
எப்போது டிஸ்சார்ஜ்
இவர்கள் எல்லோரும் தற்போது கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் முதல் 18 பேர் வரை புதன் கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். அடுத்த 20 பேர் வரும் 23ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இந்த சோதனை வெற்றி பெற்றுவிட்டது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
எங்கு இருந்து ஆட்கள்
இதற்காக ரஷ்யாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்களை அழைத்து வந்து சோதனை செய்து உள்ளனர். குழந்தைகள் மீது இந்த மருந்து சோதனை செய்யப்படவில்லை. மாறாக பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். 18-80 வயதுக்கு இடைப்பட்ட நபர்களிடம் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த மருந்து பயன் அளிக்கிறதா என்று சோதனை செய்துள்ளனர்.
விளைவு
அதேபோல் அவர்களுக்கு இந்த மருந்து காரணமாக பக்க விளைவு எதுவும் இருக்கிறதா என்றும் சோதனை செய்து இருக்கிறார்கள். அதேபோல் எந்த அளவிற்கு டோஸேஜ் கொடுக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி செய்து உள்ளனர். இந்த அனைத்து முடிவும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. சோதனை செய்யப்பட்ட எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
ராணுவ வீரர்கள்
இதற்காக ரஷ்ய ராணுவம்தான் ஆட்களை தேர்வு செய்தது . ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் சிலர் மீதும் கூட இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. சுயமாக முன் வந்து இவர்கள் இந்த சோதனையை செய்துள்ளனர். இதில் சில வெளிநாட்டினரும் அடக்கம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. அதேபோல் ஏற்கனவே வேறு சில நோய் இருக்கும் சிலருக்கும் இந்த மருந்தை சோதித்து பக்கவிளைவுகள் இல்லை என்று கண்டறிந்து உள்ளனர் .
எத்தனை மருந்து
மொத்தமாக ரஷ்யா கடந்த மூன்று மாதமாக கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதில் ரஷ்யாவில் மொத்தம் 19 மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருக்கிறது. அதிலும் 10 மருந்துகள் மனிதர்கள் மீதான சோதனையில் இருக்கிறது. தற்போது ஒரு மருந்து அதில் வெற்றி பெற்றுள்ளது.
உற்பத்தி செய்கிறோம்
இதற்கு மேல் இந்த மருந்து குறித்து கூடுதல் விவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை. இந்த மருந்தை பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்ய தயார் செய்து வருகிறோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் இதை முழுமையாக உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகிக்க குறைந்தது 1 வருடம் ஆகும் என்று கூறுகிறார்கள்.