இந்தியாவை பாருங்க.. நிலாவுக்கே போயிட்டாங்க... ஆனால் பாகிஸ்தான்.. சொந்த நாட்டையே வாரிய நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: நம்மை சுற்றியிருக்கும் நாடுகள் நிலவையே தொட்டுவிட்டன. ஆனால் பாகிஸ்தானோ நிதி நெருக்கடியில் தவிக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அங்குள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நவாஸ் ஷெரீப், லண்டனுக்கு மருத்துவ சிகிச்சை பெற சென்றார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப் அரசு அனுமதியுடன் லண்டன் சென்று விட்டு பின்னர் நாடு திரும்பாமல் டிமிக்கி கொடுத்தார்.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் பாகிஸ்தானில் அரசியல் சூழல் தனக்கு சாதகமாக மாறியதாலும் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பினார். நாடு திரும்பியது முதலே நாடு முழுவதும் பல்வேறு கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று பேசிய நவாஸ் ஷெரீப், இந்தியாவை பாராட்டி பேசினார்.
நவாஸ் ஷெரீப் கூறுகையில், "நமது அண்டை நாட்டினர் நிலவை தொட்டு விட்டனர். ஆனால் நாம் இன்னும் தரையில் இருந்தே எழவில்லை. நமது வீழ்ச்சிக்கு நாமே காரணம். இல்லையென்றால் இந்த நாடு வேறு இடத்தை அடைந்திருக்கும். இது இப்படியே தொடரக் கூடாது" என்றார். பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அது குறித்த தனது ஆதங்கத்தைதான் இப்படி கொட்டி தீர்த்துள்ளார் நவாஸ் ஷெரீப்.
தொடர்ந்து பேசிய நவாஸ் ஷெரீப் கூறுகையில், "2013 - ஆம் ஆண்டு கடுமையான மின் தட்டுப்பாட்டை எதிர்கொண்டோம். அதில் இருந்து மீண்டு வந்து முற்றுப்புள்ளி வைத்தோம். பயங்கரவாதத்தை நாடு முழுவதும் ஒழித்து அமைதியை நிலைநாட்டினோம். கராச்சியில் அமைதி திரும்பியது. நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டது. சிபி இசி தொடங்கப்பட்டது.
வளர்ச்சியின் புதிய யுகம் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டு 2 ரூபாய்க்க்கு (பாகிஸ்தான் மதிப்பு) கிடைத்த ரொட்டி தற்போது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது" என்றார். நவாஸ் ஷெரீப் இந்தியாவை பாராட்டி பேசுவது இது முதல்முறையல்ல.. ஏற்கனவே பலமுறை பாராட்டி பேசியிருக்கிறார். நவாஸ் ஷெரீப் இதற்கு முன்பாக இந்தியாவை பாராட்டி பேசும் போது, "இந்தியா செய்த சாதனைகளைப் பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை.
அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரானபோது, அந்த நாட்டிடம் கையிருப்பு பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது. இந்தியா இன்றைக்கு எங்கேயோ போய்விட்டது. ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது" என்று மிகக் கடுமையாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications